பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இலங்கையில் ஒரு வாரம்

கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னாரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்கிறார்களா?

இதை நேரில் தெரிந்து கொண்டு வருவதற்காக இலங்கைக்குச் சமுகம் கொடுப்பது என்று தீர்மானித்தேன். (நாம் இங்கே ‘விஜயம் செய்தல்’ என்று சொல்வதை நமது யாழ்ப்பாண சகோதரர்கள் ‘சமுகம் கொடுத்தல்’ என்று சொல்லுகிறார்கள்.) இலங்கை போதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.

1. கொழும்பு தமிழ்ச் சங்கத்தார் தங்களுடைய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை ‘ஒழுங்கு செய்து’ தருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.

2. தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ்த் திருவிழாவை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற அழைப்பை ஒப்புக்கொண்டிருந்தார்கள். அவ்விதம் இலங்கையில் தமிழ் விழா நடத்துவதற்குப் பூர் வாங்க ஏற்பாடுகளை ‘ஒழுங்கு செய்து’ விட்டு வரும்படி ஸ்ரீ பெரியசாமித் தூரனையும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. பதினோரு வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்றாலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவறாமல் சொல்லி வந்தேன். அது என்னவென்றால், “உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டும் என்றால், யாழ்ப்பாணத்திலேதான் காண வேண்டும்”