பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இலங்கையில் ஒரு வாரம்

சுகாதார அதிகாரி உங்களை ஏற இறங்கப் பார்த்து விட்டு, கையில் உள்ள அச்சுப்பாரத்தையும் ஏற இறங்கப் பார்ப்பார்.

பிறகு, “உங்களுக்கு வைசூரி உண்டா?” என்று கேட்பார்.

“இல்லை.”

“பிளேக்”

“இல்லை.”

“காலரா?”

“அதுவும் இல்லை.”

“டைபாய்ட், நிமோனியா, டபிள் நிமோனியா, காக்கை வலிப்பு, முடக்கு வாதம், குன்மம்....”

“இவை ஒன்றும் இல்லை.”

சுகாதார அதிகாரியின் முகத்திலிருந்து சோக ரஸம் சொட்டும். பிறகு உங்கள் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டே , “சுரம், கிரம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்பார்.

“சுரம் ஒன்றும் இல்லை. கிரம் ஏதாவது இருக்கிறதா என்று கையைப் பிடித்துப் பார்த்த நீங்கள் தான் சொல்ல வேண்டும்.”

இல்லை என்பதற்கு அறிகுறியாக உத்தியோகஸ்தர் தலையை ஆட்டி விட்டு, “ஓக்கே! போகலாம்!” என்பார்.

இத்தனை கேள்வி கேட்ட டாக்டர் “ஆஸ்த்மா உண்டா?” என்று மட்டும் என்னைக் கேட்கவில்லை. துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள்! அவ்விதம் கேட்டிருந்தால் உடனே, “உண்டு! திவ்யமாய் உண்டு!” என்று அந்த டாக்டருக்குப் பதில் சொல்லியிருப்பேன் அல்லவா?

சுகாதார அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரியிடம் போகவேண்டும்.