பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இலங்கையில் ஒரு வாரம்

டிருக்கிறார்களாம். முன்னே யெல்லாம் தோட்ட முதலாளிகளுக்கு இது சௌகரியமா யிருந்தது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குப் பெண்கள் அதிகம் தேவை. அவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுத்தால் போதும். சுதந்திரமாக ஸ்திரீகளைக் கொண்டு வந்து தோட்டங்களில் விடுவதற்கில்லை. அதனால் பல சிக்கல்கள் ஏற்படும். ஆகையால் தோட்டத் தொழிலாளிகள் இரண்டு அல்லது மூன்று மனைவியர்களை மணந்து கொள்வதை முதலாளிகள் விரும்பினார்கள். அதிகக் கூலி வருமானம் வரும் என்ற காரணத்தினால் பல தொழிலாளிகள் அவ்விதம் இருதார மணம் செய்து கொண்டார்கள்.

இப்போது சிங்கள சர்க்கார் கொண்டு வந்திருக்கும் சட்டத்தின்படி மேற்படி வழக்கம் பிரஜா உரிமைக்குப் பெரும் இடையூறாக ஏற்பட்டிருக்கிறது. “பிரஜா உரிமையைக் கைவிடுவதா? அல்லது கட்டிய மனைவி யைக் கைவிடுவதா?” என்ற தர்ம சங்கடமான நிலைமை பல ஏழைத் தொழிலாளிகளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. பாவம்! இரண்டு பெண்டாட்டிக்காரர்களுக்கு உள்ள கஷ்டங்கள் போதாவென்று இந்த நெருக்கடி வேறு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடியான பிரச்னை நமது முருகப் பெருமானுக்கும் ஏற்படத்தானே செய்யும் என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. எனவே, நண்பர் சுந்தரம் அவர்களிடம் “முருகனை இந்தியாவுக்கே திரும்ப அனுப்பி விடுவது தானே?” என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தேன். நண்பர் சுந்தரம் “அது முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டார்.