பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“கைராசிக்காரர்.”

“ஓஹோ ராமபத்ர பெரியப்பா சொன்னத சொல்லிக் காட்டுறிங்க போலுக்கு. சரி உங்களுக்கு எதுக்கு வருத்தம்? நாளைக்கு மெட்ராஸ்ல ஜி. ஹெச்ல போய் செக்கப் பண்ணுவோமா?”

“பெட்ரோல் விற்கிற விலையில போயிட வேண்டியது தான்.”

“சரி! என் குழந்தய கொடுங்க.”

“வேற பேச்சுப் பேசு!”

“சரி! கொண்டுவந்து கண்ணுலயாவது காட்டுங்க”

“நான் கொலைகாரன்; கொன்னுப்புட்டேன். சரி போ! எனக்குத் துரக்கம் வருது. நீ போடுற சத்தத்துல, மற்றவங்க தூக்கம் கலைஞ்சிடப் போவுது. பிறத்தியாருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது.”

“சரி நான் ஒங்களுக்கு சிரமம் கொடுக்கல. குழந்த நடுராத்திரில அம்மான்னு கூப்பிடுவான். தோளோடு தோள ஒட்டிப் படுப்பான். முன்னங்கையை ஊன்றி மோவாய அதுல வைத்து அம்மா படுத்திருக்காளான்னு பார்த்துட்டு அப்புறமாய் படுப்பான். ஜாக்கிரதயா பார்த்துக்கங்க. அப்புறம் ஒண்ணு, அவன் நம்ம பையன். நமக்கு மத்தில தூங்குனவன். ஒங்ககூட மட்டுமாவது படுக்கட்டும். பிறத்தியார்கிட்ட போடாதிங்க”

“அவள் பிறத்தியார் இல்ல. என் தாய் மாமா மகள்!”

மணிமேகலை தயங்கிக்கொண்டே, படியிறங்கினாள். உள்ளே போன ஜெயராஜ் ‘கொஞ்சம் நில்லு’ என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான். மணிமேகலைக்கு சந்தோஷம். குழந்தையைக் கொடுக்க வருகிறார். என் மகனை என்னிடம் தர வருகிறார்.