பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 115


“பரவாயில்ல. நான் பஸ்ல போயிடுவேன். ஒங்களுக்கும் வேலயிருக்கும். ஸ்டேஷனுக்கு வர முடியாது. பிறக்கும் போது தனியாத்தானே பிறந்தேன். போகும்போதும் தனியாவே போறேன். சரி. போய்த் தூங்குங்க”

“நான் ஒண்ணும் உன்னை போகச் சொல்லல.”

“எனக்குத் தெரியாதா? நீங்க என்னைக்குமே என்னை வாயால போன்னு சொல்லமாட்டிங்க. நான் கொடுத்து வைத்தவள்.”

மறுநாள் மத்தியான வேளையில் மணிமேகலை புறப்பட்டாள். கையில் ஒரே ஒரு சூட்கேஸ்தான். எல்லோரும் மெளனத்தால் விக்கித்து நின்றார்கள். இந்திரா அழுது கொண்டிருந்தாள். அந்தக் கணத்தில் மட்டும் மனிதாபிமானம் வந்ததுபோல் அனைவரும் செயலற்று நின்றார்கள். வசந்திகூட கவிழ்ந்து பார்க்கவில்லை.

எல்லோரிடமும் பொதுப்படையாகப் பேசிவிட்டு, தனக்குள்ளேயே கோபப்பட்டவர் போல் வார்த்தைகளை பிறர் கேட்காதபடி குதப்பிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்ற மாமனாரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். கிழவர் குடும்பத்தினரைப் பார்த்து “பாமாவ அவள் போயிருக்கதால கேட்கிறேன். இவள்கிட்ட என்ன சொல்லி அனுப்பணும்? சொல்லுறியளா?”

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபோது, கிழவி ‘கொட்டினாள்’

“ஜெயராஜ்தான் அவஸ்தப்படுறான். என் மவளும் அவஸ்தப்படனுமா? கைகாலு குறஞ்சி போகனுமா?”

எல்லோரும் எப்படிச் சொல்வது என்று திகைத்ததை, யாராவது சொல்லட்டும் என்று எண்ணியதை கிழவி சொல்லிவிட்டாள். எல்லா விஷயங்களையும் ரத்னச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாள்.