பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200★

இல்லம்தோறும் இதயங்கள்



அம்மான்னு சொல்லுடா. சித்தியைப் பார்த்து வேணுமுன்னால் நீ விரும்புறதையே சொல்லுடா. 'அம்மா கிட்ட போமாட்டேன்னு சொல்லுடா. என் நிலைமையும் அதுதாண்டா. என் கண்ணே, பரவாயில்லடா. கோவிலுக்குப் போடா. நம்ம அப்பன் முருகன் இருக்காண்டா. அவனை ஒன்னை நினைத்துத்தான் கும்பிட்டுட்டு வாரேண்டா. நாம ஒருவரை, ஒருவர் பார்க்கிற காலம் வருண்டா. வரட்டுமா? ஏய், படுவாப் பயலே! அம்மான்னு சொல்லுடா! சொல்லுடா...'

"என்ன யோசிக்கிற? போகலாண்டி!” என்று காமாட்சி சொன்னபோது அவள் முதுகுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டே பார்த்த மணிமேகலை, அப்படியே மறைந்து மறைந்து அவள் பின்னாலேயே போனாள். சிறிது தூரம் போனதும் முன்னால் போனாள். தன் பிள்ளையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க, தன்னைப் பார்த்து இதேமாதிரி துடித்த அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது. யாருக்காக அழுவது? பெற்றவனுக்கா? பிறந்தவனுக்கா? இரண்டு பேரில் யாருக்கு அதிகமாய் அழுவது என்று போட்டியிட்டு இறுதியில் மனம் சலித்துப் போனதுபோல் அவள் போனாள். இறுதியாக அவள் திரும்பிப் பார்த்தபோது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஜெயராஜ்களும், இதரர்களும் கோவில் முனைப்பில் இருந்த பையனிடம் டோக்கன் வாங்கிவிட்டு செருப்பைக் கழட்டிப் போட்டார்கள்.

வாரங்கள், ஒரு மாதமாகச் சேர்ந்தது. 'கூத்து' கோவிந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். அவனிடம் 'கிளார்க் வேலையைப் பற்றி அவள் பேசவில்லை. இந்த வேலையில் இப்போது அவளுக்கு ஒரு நிறைவு ஏற்பட்டது.

ஒருநாள். இதுவும் அவளை இன்னொரு விதமாக மாற்றிய மாறுபட்ட நாள்!