பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202★ இல்லம்தோறும் இதயங்கள்



சொல்லப் போனவன் முகத்தை திருப்பி முதுகுப் பக்கத்தை நனைத்துவிட்டு "எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். தற்செயலாய் இவனைப் பார்த்தேன்," என்று சொல்லி விட்டு ‘கவலப்படாத, நானிருக்கேன். இன்னையில் இருந்து உன் கவலையை நான் வாங்கிக் கொண்டேன். இனிமேல் நீ கவலைப்படக் கூடாது. புரியுதா?.” என்றான். அவளை வாங்க முடியாது போனாலும் அவள் கவலைகளை வாங்கிக்கொண்ட திருப்தியோடு சோகமாகப் புன் முறுவலித்தான்.

மணிமேகலை விம்மினாள். கையிலிருந்த ஒரு கரண்டி அப்படியே கீழே விழுந்தது. அவள் புலம்பினாள்.

"அத்தான்! என் அத்தான்! என்னை நீங்க மறக்கலியே மறந்திருக்கக் கூடாதா? மறக்கலியே!”

வெங்கடேசன் இப்போது சுயத்துக்கு வந்துவிட்டான். ஆனால் அவன் பதில் கம்பீரத்தோடு வந்தது.

"என்ன மணிமேகலை. 'அன்பு ஒரு சக்தி. அதன் ரூபம் மாறலாமே தவிர அந்த சக்தி மாறாதுன்னு நீயே சொன்னதை மறந்துட்டியே. நான் ரூபம் மாறியிருக்கேன். அவ்வளவுதான். ஒனக்கே இந்த நிலைமைன்னா இயற்கையின் சூட்சுமத்தில் ஏதோ ஒன்று இருக்கும்மா. கடவுள், உலகின் பாவங்களைத் தாங்குவதற்கு தைரியசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் சுமக்கக் கொடுப்பாராம். ஒனக்கு வந்த நோய் ஒரு சிலுவைக் குறி. எதோ ஒரு காரணத்திற்காக வந்த திரிசூலம். ஒனக்குப் புரியுதோ, இல்லியோ எனக்குப் புரியுது!”

அவளும் புரிந்தவள்போல் கம்பீரமாய் நின்றாள்.