பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24 + இல்லம்தோறும் இதயங்கள்



வார்த்த சொல்லியிருக்கலாம்.... அம்மாவுக்கு அம்மாவா இருந்த எங்கிட்ட நீ சொல்லப்படாதாம்மா ? சொல்லப்படாதா?”

    மணிமேகலை, தந்தையின் பேச்சைப் புரிந்து கொண்டாள். புரியப் புரிய, வெங்கடேசன் அவள் முன்னால் வந்து நின்றான்.
    அவள் சுதாரித்துக் கொண்டாள்.
    அப்பாவின் கால்களைப் பிடித்துவிட்டாள். வாடைக் காற்றுப் படாமல் இருப்பதற்காக, அவருக்காக வாங்கி வைத்த சால்வையை எடுத்து அவர்மீது போர்த்தினாள். தூளியிலே போட்டு, தோளிலே எடுத்து, கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த அந்த பெற்ற மனம், அண்ணிக் காரியாலும், தன் பிரிவாலும் படும் வேதனையை தன்னுள்ளே வாங்கிக்கொண்டவள் போல்-
    அவரது கால்பாதங்களை தலையணையாக்கியவள் போல், அவற்றில் தலைவைத்துத் தூங்கினாள். தூக்கம் கலைந்த அருணாசலம். மகளின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாதவர்போல், மடக்க நினைத்த கால்களை அப்படியே வைத்துக்கொண்டு-அந்த லேசான வேதனையில் ஒரு பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
(2)
    அந்த ஊரும், அதன் ஏரியும், மாந்தோப்பும், வாழைத்தோப்பும், எலுமிச்சை மரங்களில் பட்டு அதன் பழங்களில் உராய்ந்து, வாசனையுடன் வரும் காற்றும்... கல்லூரிக்காரியான பாமாவிற்குப் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஏரிக்கருகே உள்ள தென்னந்தோப்பும், அந்தத்