சு. சமுத்திரம் ★ 51
“பாமா, சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். சந்திரனை நீ கட்டிக்க, நம்ம வீட்டு பெரியவங்க சம்மதிக்கலன்னு வச்சுக்கோ... என்ன பண்ணுவே?” என்றாள்.
பாமா, இருக்கையில் இருந்து, ஆவேசமாக எழுந்தாள். சீறிப் பேசினாள்.
“அண்ணி, இந்த மாதிரி பேச்சுக்குக்கூட சொல்லாதிங்க. நான் உங்களை மாதிரி குடும்பப் பெண் அல்ல. என் வாழ்க்கைக்கு நான்தான் எடிட்டர். எனக்கு இப்பவே இந்த ரயிலுல இருந்து குதிக்கலாம்போல தோணுது.”
மணிமேகலை, பாமாவை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இதர பிரயாணிகள் அவர்களை விநோதமாகப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமலே, அந்த அணைப்பை விடாமல் இருந்தாள்.
ரயில், இனிமேல் திரும்பிவரப் போவதில்லை என்பது மாதிரி, குதிப்பதுபோல ஓடிக் கொண்டிருந்தது.
5
ரயில், சென்னையை நெருங்க நெருங்க, மணிமேகலைக்கு, பிறந்த வீட்டு ஞாபகம் சிறிதாகவும், புகுந்த வீட்டு ஞாபகம் பெரிதாகவும் மாறிக் கொண்டிருந்தன.
அவள் கணவன் ஜெயராஜ், அரக்கோணத்தில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான். மணிமேகலை, உள்ளே வந்த அவனின் கையை, பாமாவுக்குத் தெரியாமல் கிள்ளிக் கொண்டே சிரித்தாள். பேமிலி பிராப்ளத்தைப் பற்றி அவள் கேட்கவில்லை. அவனே, ஆற அமறச் சொல்லட்டும்