சு. சமுத்திரம் ★ 61
மணிமேகலை சீறினாள்.
“உடைந்த கல் ஒட்டுமோ ஒட்டாதோ? அந்தக் கல்லை எடுத்து உங்கள மாதிரி அவநம்பிக்கை ஆசாமிங்க மேல எறியுறது வரைக்கும் இந்த மாதிரி பிரச்னை தீராது.”
“கார். ‘தம்பிகிட்டேயே இருக்கட்டு’முன்னு ஒரு வார்த்தை சொல்றானா பாரு!”
“ஒங்களோட பெரிய வம்பு, எல்லாரும் மொத்தமாய் இருக்கும்போது ரகசியமாய் பேசுவிங்க. தனியாய் இருக்கும்போது பகிரங்க விஷயத்த பேசுவிங்க.”
ஜெயராஜ், மணிமேகலையையே பார்த்தான். அவளை அணைக்கவோ அள்ளிப் பருகவோ தோன்றவில்லை. அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது.
6
ஒரு மாத காலம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.
மத்தியான வேளை!
மணிமேகலை, புருஷனின் துணிகளை அயன் செய்து முடித்துவிட்டு, அந்த வீட்டுக் குழந்தைகளின் உடுப்புகளுக்கு கஞ்சி போட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயராஜூம் அவன் அண்ணன் சங்கரனும், காரிலிருந்து இறங்கி, ஒருவர் தோள் இன்னொருவர் தோளில் படும்படி சிரித்துக்கொண்டே வந்தார்கள்.
மணிமேகலை புரிந்துகொண்டாள். சகோதரர்கள் சிரித்துக்கொண்டு வருகிறார்கள் என்றால், ஏதாவது