பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 71


“டோண்ட் வீப் எங்மேன்! ஆரம்ப கட்டத்துலயே கண்டுபிடிச்சாச்சு. இதுக்காக நீ கடவுளுக்கு நன்றி சொல்லணும். எந்த ஊரு?”

“அரக்கோணம் ஸார்!”

“அங்க டாக்டர்கிட்ட அடிக்கடி செக்கப் பண்ணுங்க. ஓகே! போயிட்டு வாரீங்களா? இந்தாங்க பிரிஸ்கிரிப்ஷன். பேஷியண்ட்ஸ் நிறைய வந்திருக்காங்க.”

இருவரும் எழுந்து அவரையே பார்த்தார்கள்.

“அப்புறம் ஒண்ணு. இந்த நோய் நல்லவங்களுக்கும் வரலாம். கெட்டவங்களுக்கும் வரலாம். பணக்காரனுக்கும் வரலாம், ஏழைக்கும் வரலாம். ஆணுக்கும் வரலாம், பெண்ணுக்கும் வரலாம். இது தொத்துவியாதியில்ல. குறிப்பா. ஒங்க ஒய்புக்கு இருக்கது ஜஸ்ட் எ பிகினிங்... நாட் இன்பெக்ஸுவஸ். அவங்களோட தாராளமா செக்ஸ் வச்சிக்கலாம். அவங்க தாராளமாய் கைக்குழந்தை இருந்தால் பால் கொடுக்கலாம். ஆனால் மாத்திரை சாப்பிடுறதை விடப்படாது. காட் இஸ். கிரேட் இந்த மகாலட்சுமிய மட்டும் கைவிட்டுடாதே. ஒகே!”

அப்போதுதான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அப்போதுதான் திருமணம் ஆனவர்கள் போல், இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு—ஆதரவோடும், ஆதரவுக்காகவும் பிடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

டிரைவர் இருக்கையில் அமரப்போன ஜெயராஜ், திடீரென்று “என்னால இப்போ வண்டிய ஓட்டமுடியாது” என்றான். மணிமேகலை மெளனமாக அவனைத் தொட்டு கார் சாவியை வாங்கினாள். ஒரு மாதம் விளையாட்டுத்தனமாகக் கார் ஒட்டக் கற்றுக் கொண்டவள். ஒருசமயம், சென்னை நகர சாலைகளிலும் சிரமத்துடன் இதே காரை ஓட்டியிருக்கிறாள். ஆனால் அப்போதைய சூழ்நிலையோ வேறு...