பக்கம்:இளந்தமிழா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெரு

தெருவேநான் செல்கின்றேன்
திரும்பியும்வந் துனைமிதியேன்
பெருநாளுன் உறவடைந்த
திருநாள்தான் எனினுமின்று -தெருவே நான்...

உருக்குலைந்து நீதேயப்
பருக்கைக்கல் எழநடந்தேன்
இருப்பினும்நீ விருப்புடனென்
செருப்புக்கால் தனைப்பொறுத்தாய்
-தெருவே நான்...

உள்ளமெலாம் கவர்அணங்கு
உன்னகத்தே உறைகின்றாள்
கள்ளனைப்போல் பதுங்கிவந்து
கண்டதெலாம் அறிவாய்நீ
-தெருவே நான்...

எத்தனைநாள் எதுநேரம்
எதுவேளை எனக்கருதேன்
பித்தனைப்போல் ஊசலிட்டுப்
பெருஞ்சுமையாய் உனக்கானேன்
-தெருவே நான்...

என்னாசைக் கடல்வெள்ளம்
ஏங்குநெஞ்சில் கரைபுரளப்
பன்னாட்கள் நடந்தபெரும்
பாரமதால் நைந்தனையோ? -தெருவே நான்...

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/130&oldid=1460175" இலிருந்து மீள்விக்கப்பட்டது