பக்கம்:இளந்தமிழா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணீர்

முத்தெனவே பிதுங்கிவரும்
மோகனத்துக் கண்ணீரே
முத்தினுக்கும் கண்டறியா
எத்தனையோ மதிப்புடையாய்
பைங்கிளிச்சொல் மங்கையரின்
பாசுபதம் நீயலவோ?
அங்குனத்தான் எதிர்த்துவெல
ஆற்றல்மிகும் படையுண்டோ?
உள்ளத் துணர்ச்சிக்கோர்
உருக்கொடுக்கும் நல்மணியே!
கள்ளவிழும் கோதையர்கள்
கண்ணகத்தே வலிபெறுவாய்.
ஆடவர்கள் தங்கண்ணில்
அனைவருக்கும் ஏளனம் நீ
வாடிநைந்த அடியாரின்
வளர்பக்தி வெள்ளம் நீ
வஞ்சகத்தின் கண்களிலே
மதிமயக்கும் நாடகம் நீ
பஞ்சையுளக் குழந்தையரை
நெஞ்சணைக்கச் செய்வாய் நீ.
காதலியின் கண்களிலே
கண்டுவிட்டால் உலகனைத்தும்.



37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/39&oldid=1460148" இலிருந்து மீள்விக்கப்பட்டது