பக்கம்:இளந்தமிழா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கல்


பொங்கல் புதுநாள் வந்ததுபார்-எங்கும்
பொங்குக அன்பறம் இன்பமுமே!
இங்கெமை வருத்திய துன்பமெல்லாம்-இன்றே
ஏகிட இறைவனைத் தொழுதிடுவோம்


பொங்கொளி ஞாயிறும் எழுந்தனனே-அவன்
பொலிவினில் மாய்ந்திடும் பனிபோல
தங்கிய குறைகளும் சிறுமைகளும்-தலை
சாய்ந்தினி ஓடிடும் திண்ணமதே

செந்நெலும் கரும்பும் விளைந்தனவே-நல்ல
தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக-நாடு
எழிலுடன் கூடியே நலமுறுக

பிரிவுகள் பேசியே பூசலிட்ட-பழம்
பேதமை தள்ளியே அனைவோரும்
ஒருதனிக்குடும்பமாய் வாழ்ந்திடுவோம்-நம்முள்
ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

தமிழன் திருநாள் பொங்கலென்றால்-அதில்
தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே-யாரும்
புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/53&oldid=1460159" இலிருந்து மீள்விக்கப்பட்டது