பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளமையின் நினவுகள்
34

ஒன்று என்று வைத்துக்கொண்டார்கள். அத்தனை வேறுபாடு இருவர் உள்ளங்களிலும் முகிழ்த்துவிட்டது. பின்பு பெரியம்மா இறக்கும்போது அவர்தம் பொருளையெல்லாம் எனக்கு வைத்துச்செல்ல, அந்தப் பிரிந்த தூக்கை ஒன்றாக்கி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது அன்றாடம் எனக்குப் பழமையை நினைவூட்டிக்கொண்டு, பிரித்துக் கெடுக்கும் மக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறது.

உடன் பிறந்தவர்கள் நிலை இது என்றால் சுற்றத்தாரைப் பற்றியும் இரண்டொன்று கூறவேண்டும். எங்கள் ஊரில் வாழும் சுமார் நூறு குடும்பத்தார்களும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருங்கிய சுற்றத்தாராகத்தாம் இருப்பார்கள். என்றாலும் அவர்களுக்குள்ளே நடைபெற்ற சண்டைகளும் சச்சரவுகளும்-அப்பப்பா-அளவிறந்தன. துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லத் துணை செய்யும் அந்த அளவிற்கு அவர்கள் உறவுமுறை வளர்ந்திருந்தது என்னலாம். அந்த நிகழ்ச்சியின் நினைவுகளைப் பின்னால் பார்க்கலாம். இந்த நிலையில் எனக்கும் அந்த ஊரில் நெருங்கின உறவினர் இரண்டொருவர் இருந்தனர். மற்றெல்லாரும் கூட உறவினர்கள் தாம். ஆயினும் அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பின்னால் பழித்துரைப்பதும் எதிரில் போற்றுவதும் செய்யும் செயல் கண்டால் அன்றைக்கே எனக்கு அருவருப்புத் தோன்றும். பின் திருக்குறளை விளக்கமாகப்படிக்கும் கால் அவர்களது நிலைபற்றி எல்லாம் நன்கு புரிந்தது.

எனக்கு நெருங்கிய ஒர் உறவினர் வெளியூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். யாராவது உறவினர் வந்தால் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தானே. அம்மா