பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

காது

ஆண்டுகட்குப் பின்னர் காகிதம் செய்யும் கலையை சீனர்களிடமிருந்து அராபியர்கள் கற்றனர். அதன் பின்னரே அவர்கள் மூலம் இக்கலை ஐரோப்பிய நாடுகளை எட்டின.

தொடக்கக் காலத்தில் காகிதம் கையாலேயே செய்யப்பட்டது. காகிதம் செய்யும் இயந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவராவார். அங்குதான் முதன்முதலாகக் காகிதம் எந்திரம் மூலம் செய்யப்பட்டது. அதன் பின்னர் எந்திரம்மூலம் காகிதம் உற்பத்தி உலகெங்கும் பரவியது.

இந்தியாவில் எந்திரம்மூலம் காகித உற்பத்தி 1870ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று இந்தியாவெங்கும் காகிதத் தொழிற்சாலைகள் பரவலாக அமைந்து காகித உற்பத்தி செய்து வருகின்றன. எனினும் இந்தியாவின் தேவையில் ஒருபகுதி காகிதம்தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றபடி தேவைப்படும் காகிதங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்து கொள்கிறோம்.

காகிதம் செய்வதற்கு மூலப்பொருளாகத் தாவரப் பொருட்களே அமைந்துள்ளன. காகிதம் செய்ய மரம், மூங்கில், சணல், பருத்தி மற்றும் சிலவகை புற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கந்தைத் துணியும் பழைய காகிதங்களும்கூட காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன.

காகித ஆலைகளில் சிறியதாக வெட்டப்பட்ட மரத்துண்டுகளை நீரிலிட்டு அரைக்கிறார்கள். அப்போது நீரில் மிதக்கும் நார்ப் பொருட்களை அப்புறப்படுத்தி அரைத்த மரக் கூழே காகிதக் கூழாக (Pulp)ப் பயன்படுகிறது. மற்றொரு முறையிலும் காகிதக்கூழ் தயாரிக்கப்படுகிறது. மரத்துண்டுகளை இரசாயனப் பொருள்களோடு கலந்து கொதிக்க வைக்கப்படுகிறது. அப்போது கிடைக்கும் இரசாயனக் காகிதக்கூழ் காகித உற்பத்திக்கான மிகச் சிறந்த மூலப்பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதக்கூழை பல்வேறு வகையான உருளைகளைக் கொண்ட நீண்ட இயந்திரத்தில் ஈர உருளையிலிருந்து வரும்போது நீர்வடிந்து நல்ல அழுத்தத்தில் பளப்பளப்புப் பெற்று நன்கு உலர்ந்த காகிதமாக உலர் முனை எனப்படும் மறு முனை சென்று உருளைகளில் சுற்றப்படுகிறது. பின் வேண்டிய அளவுகளில் காகிதம் வெட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.

தற்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வகையினவாகக் காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கரும்பாலைகளில் வீணாகும் கரும்புச் சக்கையிலிருந்தும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. காகித உற்பத்தியில் கனடாவும் அடுத்து அமெரிக்கா, ஜப்பான், பின்லாந்து நாடுகளும் தலைசிறந்து விளங்குகின்றன.


காது : உடலில் உள்ள ஐம்புலன்களில் காது ஒன்றாகும். காது கேட்க உதவும் கருவியாக அமைந்துள்ளது.

ஒலி அலைவடிவில் பரவுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. ஒலி அலைகளை வாங்கி உணரச் செய்யும் காது மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டு இயங்குகிறது. அவை முறையே புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும்.

புறச்செவியில் செவிமடலும் செவிப் பறையை நோக்கிச் செல்லும் செவிக் குழாயும் அமைந்துள்ளன. செவிமடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பெரும் பயன் ஏதும் இல்லை. ஆடு மாடு போன்ற பிற உயிரினங்கள் தங்கள் காது மடலை திருப்பியும் வளைத்தும் வரும் ஒலியை சேகரித்து உள்ளே அனுப்ப இயலும், ஆனால் மனிதனின் காதுகளை வளைக்கவோ திருப்பவோ முடியாது. இதனால் ஒலி வரும் திக்கை நோக்கிக் காதைத் திருப்பி ஒலியைப் பெற நேர்கிறது. காது மடலிலிருந்து உள் நோக்கிச் செல்லும் செவிக்குழாய் சுமார் இரண்டு செ.மீ. நீளமுள்ளது. இதுவே ஒலியை செவிப்பறை நோக்கிக் கொண்டு செல்கிறது.

நடுச்செவி என்பது ஒரு குறுகிய அறை போன்றது. இது செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையே அமைந்துள்ளது. இஃது செவிக்குழல் எனும் மெல்லிய குழாயால் தொண்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியப் பணி நடுக்காதில் உள்ள காற்றழுத்தத்தை வெளியிலுள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பதாகும்.