பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தசக்தி

121

நடுக்காதுக்கு அப்பால் உள்ள பகுதி உட்செவி ஆகும். இது ஒரு சங்கு போன்ற அமைப்பைக் கொண்டது. காது கேட்பதற்கு இதுவே அடிப்படையாகும். இப்பகுதி மூளை நரம்போடு இணைக்கப்பட்டுள்ளது.

செவிக்குழல் வழியே வரும் ஒலியானது மிகமென்மையான செவிப்பறையை அடைந்து அதிர்வேற்படுத்துகிறது. செவிப்பறையின் அதிர்வுஅடுத்து அமைந்துள்ள மூன்று சிற்றெலும்புகளையும் அதிர்வடையச் செய்கிறது. இதன் விளைவாக காது திரவத்தில் அசைவு உண்டாகிறது. இந்த அசைவே நரம்புகள் மூலம் ஒலியை மூளைக்கு அனுப்பி உணரச் செய்கிறது. இவ்வாறு தான் நாம் ஒலியுணர்வைப் பெறுகிறோம்.

காதினுள் உள்ள இம்மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுது பட்டால்கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறது. எனவே, காதைப் பாதுகாத்தல் என்பது மிகமிக அவசியமாகும்.

எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. உரக்கப் பேசினால் மட்டும் கேட்கும். சிலருக்கு மிக உரக்கக் கத்தி பேசினால் மட்டுமே காது கேட்கும்.

இத்தகையவர்கள் ஒலியைப் பெருக்கித் தரவல்ல காதொலிக் கருவியைக் காதில் பொருத்திக்கொண்டால் காது நன்கு கேட்கும். முழுச் செவிடுகட்கு இத்தகைய கருவிகளால் பயனேதும் இல்லை.

எனவே, காதில் அழுக்கு அடையாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். அழுக்கை அகற்ற 'காது குடைதல்’ என்ற பெயரால் குச்சியை கொண்டு காது குடையாமல் அதற்கென்று உள்ள பஞ்சுக் குச்சிகளையே பயன் படுத்த வேண்டும். மருத்துவரிடமே முறையாகக் காட்டி அழுக்கை அகற்ற வேண்டும்.

பலத்த சத்தம், அதிக இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோர் காதுகளில் ஒலி தடுப்பி (Muff) களைப் கொண்டு பணி செய்தால் காது கேளாமையைத் தவிர்க்கலாம்!

காதின் உட்புற அமைப்பு


காந்த சக்தி : இரும்பு, எஃகு போன்ற பொருட்களை ஈர்த்திழுக்கும் ஆற்றல் உள்ள கனிமம் காந்தம் என அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகட்டு முன்பே இந்தியர்களும் சீனர்களும் எகிப்தியர்களும் காந்தம் பற்றி அறிந்திருந்தனர். அதன் தன்மைகளைத் தெரிந்துகொண்டு கடற்பயணம் போன்ற சமயங்களில் திசையறியப் பயன்படுத்தி வந்தனர். ஏனெனில் காந்த ஊசியின் ஒரு முனை வடக்கு நோக்கியே திரும்பி நிற்கும். மற்றொரு முனை தெற்கு நோக்கி இருப்பதால் எளிதில் திசை அறிய முடிந்தது.

காந்தம் இயற்கையாகவும் கிடைக்கிறது. 'மாக்னடைட்’ எனும் அயக்காந்தக்கல் கனிமமாக இயற்கையாகவே மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது. இதுவே இயற்கைக் காந்தமாகும். மற்றொரு வகைக் காந்தம் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. காந்தத் தூண்டுதலால் காந்தமாகக் கூடிய பொருளை காந்தமாக்குவது செயற்கைக் காந்த முறையாகும். இதுவே 'செயற்கைக் காந்தம்’ என்று அழைக்கப்படுவது. இயற்கைக் காந்தத்தைவிட வலிமையானது செயற்கைக் காந்தமாகும். செயற்கைக் காந்தமே உலகில் மிக அதிக அளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது.