பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கால்நடைகள்

தாதுப்பொருட்களுடன் கலந்தே கிடைக்கிறது. மிக முக்கியத் தாதுப்பொருட்களான சுண்ணாம்புக்கல், சலவைக்கல், தாலமைட் போன்றவைகளில் மிகுதியான கால்சியம் உண்டு. கிளிஞ்சல், முத்து, முட்டை ஓடு, சங்கு பவளம் ஆகியவற்றில் கால்சியம் கார்பனேட் மிகுதியாக உள்ளது. எலும்பில் கால்சியம் பாஸ்பேட்டும் அதிகம் உள்ளது. கால்சியம் சல்பேட்டாக ஜிப்சம் எனும் தாதுப் படிவத்திலிருந்து பெறுகிறோம். இதிலிருந்துதான் கட்டுமாவாகப் பயன்படும் 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' பெறுகிறோம்.

வெண்மைநிறத் தாதுவான கால்சியம் திண்மையானதாகும். காற்றுடன் வினைபுரிந்து மாற்றமடையும். கால்சியத்தை நீருடன் கலக்கும்போது ஹைட்ரஜன் குமிழிகள் வெளிப்படும். கால்சியம் அதிகம் கலந்துள்ள நீர் கடினத் தன்மை பெறுவதால் சோப்பைப் பயன்படுத்தும்போது எளிதில் நுரை உண்டாவதில்லை.

கால்சியம் தாவர வளர்ச்சிக்கும் மிருகங்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத சத்துப்பொருளாகும். அதேபோன்று மனிதர்களுக்கும் கால்சியம் இன்றியமையாப் பொருளாக உள்ளது. நமக்கு வேண்டிய கால்சியத்தை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், நீர் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.

மனிதனின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத நுண்ணுாட்டச்சத்து கால்சியம் ஆகும். மேலும் கால்சியம் அயனிகள் மற்ற அயனிகள் திசுக்களுக்குள் சென்று வெளியேறுவதைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே கால்சியம் உப்புகள் இரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகின்றன.


கால்நடைகள் : நாம் விட்டுப் பிராணிகளாக வளர்க்கும் விலங்குகள் அனைத்துமே கால்நடைகளாகும். எனினும், ஆடு மாடுகள் மட்டுமே கால்நடை என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள ஆடுகளும் மாடுகளும் இடத்திற்கு இடம் வேறுபட்ட வகையினவாக உள்ளன. சிந்தி, பஞ்சாப் போன்ற பகுதிகளைச் சார்ந்த மாடுகள் சிறந்த இனங்களாகக் கருதப்படுகின்றன. இப்பகுதிகளைச் சார்ந்த பசுக்கள் மிகுதியாக பாலைத் தருகின்றன. கடுமையாக உழைக்கக்கூடியவைகளாகவும் உள்ளன. அதே போன்று ஓங்கோல் பசுக்களும் காங்கேயம் காளைகளும் சிறந்த இனமாகக் கருதப்படுகின்றன. மணப்பாறை மாடுகள் உழைப்புக்கேற்றவைகளாகும்.

காங்கேயக் காளை

உயர்ந்த ரகப் பசுக்களோடு சாதாரணவகைப் பசுக்களை இணையச் செய்து கலப்பின கால்நடைகள் உருவாக்கப்படுகின்றன. இவையும் அதிகம் உழைக்கத்தக்கனவாகவும் அதிகம் பால்தரத்தக்கவைகளாகவும் உள்ளன.

உலகிலேயே மிகுதியான கால்நடைகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கு இந்தியா ஒரு விவசாய நாடாக இருப்பது காரணமாகும்.

ஜெர்சி பசு

நாம் நமக்கு வேண்டிய பாலையும் வெண்ணெயையும் பசுக்கள், எருமைகள் மூலமே பெறுகிறோம். எருமைகள் பசுக்களைவிட அதிக அளவில் பாலும் வெண்ணெயும் தருகின்றன. டெல்லி எருமை உயர்தரமாகக் கருதப்படுகிறது.