பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்மின்சாரம்

191

water) ஆகும். மென்னீரில் சோப்பைக் கலந்து கலக்கினால் நுரை உண்டாகும். கடின நீரில் சோப் நுரை உண்டாகாது. காரணம், கடின நீரில் கால்சியம், மக்னீசியம் உப்புக்கள் கலந்திருப்பதேயாகும்.

நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைய நீர் மிக அவசியம். வாழும் உயிர்களின் திசுக்களில் நீர் அடங்கியுள்ளது.

மழை மூலம் தரையை அடையும் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அதை குளம், ஏரிகளில் தேக்கிப் பயிர் விளைச்சலுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் பயன்படுத்துகிறோம். பெரும் அணைகளில் நீரைப் பெருமளவில் தேக்கிவைத்து பயிரிட, குடி நீருக்குப் பயன்படுத்தும் அதே சமயம் நீரோட்ட விசையைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து வாழ்க்கையின் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம்.

நீரில் கன ஹைட்ரஜன் இருப்பின் அதுவே கனநீர் என அழைக்கப்படுகிறது. இது சோதனைச் சாலைகளிலும், உட்கரு மின்சக்தி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.


நீர்த் தாவரங்கள் : தரையில் உள்ள தாவரங்களைப் போன்றே நீரில் வளரும் தாவரங்கள் உண்டு. இவை நீர்த் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. நீர்க் தாவரங்கள் பல வகையினவாகும். இவைகளுள் சில நீருக்கடியில் முளைத்து நீரின் மேற்பரப்பில் வளர்வனவாகும். மற்றும் சில நீருக்கடியிலேயே முளைத்து அங்கேயே வளர்ந்து வருவனவாகும்.

தாமரை. அல்லி, குவளை, கோரை முதலிய நீர்த்தாவரங்கள் நீருக்கடியில் தரையில் வேர் விட்டு, நீர் மட்டத்திற்கு மேலும் கீழுமாக வளர்வனவாகும். சில நீர்த்தாவரங்கள் நீருக்கடியில் தரையில் வேர்விட்டு நீர் மட்டத்திற்கு வராமலே நீருக்கடியிலேயே வளர்ந்து வாழ்வனவாகும். சிலவகைப் பாசிகள் இத்தகையனவாகும். இன்னும் சில நீர்த் தாவரங்களின் வேர் அடிநீர்ப்பரப்பில் வேர் ஊன்றாது நீருக்கடியில் பிடிமானம் இல்லாது இருக்கும். இவற்றின் இலையும் பூவும் நீர் மட்டத்திற்கு மேலாக இருக்கும். ஆகாயத்தாமரை, பிசாசுத் தாமரை போன்றவை இத்தகைய நீர்த்தாவரங்களாகும்.

கடற்கரையோரங்களிலும் சதுப்பு நிலப்பகுதிகளிலும் சிலவகை நீர்த் தாவரங்கள் உண்டு. கிண்ணை, சுண்டல் போன்றவை இத்தகைய தாவரங்களாகும். இப்பகுதிகளில் இத்தாவரங்கள் நிறைய இருந்தாலும் செழிப்பாக இருப்பதில்லை. காரணம், இப்பகுதியில் உள்ள நீரில் அதிக அளவில் உப்பு இருப்பதால் வேர்த்தண்டுகள் நீரை அதிக அளவில் உறிஞ்சவிடாமல் உப்பு படிந்து தடுத்து விடுகிறது. இதனால், இந்நீர்ச் செடிகள் நீர்ப் பற்றாக்குறையால் வளரும் பாலைத் தாவரங்கள் போன்று பருத்தும், சொரசொரப்பாகவும் சிறிய இலைகளையுடையனவாகவும் காணப்படுகின்றன.

நிலத்தாவரங்களுக்கும் நீர்த்தாவரங்களுக்கும் சில குறிப்பிட்ட வேறுபாடுகள் உண்டு. நீர்த்தாவரங்கள் எப்போதும் நீரிலேயே இருப்பதால், அதற்கேற்ப அதன் அமைப்பும் தன்மைகளும் அமைந்துள்ளன.

இலைப்பாசி போன்ற தாவரங்கள் நீரில் மிதக்கின்றன. இவை தன் தண்டுப்பகுதி மூலம் காற்றிலுள்ள பிராணவாயுவை கிரகித்து, அவற்றை இலைக்காம்புகளுக்கருகில் அமைந்துள்ள பைகளில் நிரப்புகின்றன. காற்று நிறைந்த பைகளால் இத்தாவரங்கள் நீரில் எளிதாக மிதக்க முடிகிறது.


நீர் மின்சாரம் : மின்சாரத்தின் துணையின்றி வாழவே முடியாது என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நம் வாழ்க்கை வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக மின்சாரம் அமைந்துள்ளதெனலாம். அத்தகைய மின்சாரத்தை நீரிலிருந்தும் அனலிலிருந்தும் அணுச்சக்தியிலிருந்தும் இன்று நாம் பெற்று வருகிறோம். இவற்றுள் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.

உயரமான இடத்திலிருந்து வேகமாக விழும் போது உண்டாகும் நீர்ச்சக்தியை மின்னாக்கியின் துணைகொண்டுமின்சாரமாகமாற்றுவதன் மூலம் பெறுவதே நீர் மின்சாரம் ஆகும். இதற்காக வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றுநீரை அணை கட்டி நீர்த்தேக்கங்களில் தேக்குவர். இதன் மூலம் ஆற்றுப் பெருக்கு இல்லாத காலத்திலும் கூட மின்சாரம் தயாரிக்க முடிகிறது.

அணையில் தேக்கப்பட்ட நீரைக் குழாய் மூலம் மின்னாக்க எந்திரப் பகுதிக்குப் பாய்ச்சுவர். அங்குள்ள டர்பைன்கள் எனும் நீர்ச் சுழலி எந்திரங்கள் வேகமாகச் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியாகும் மின்சக்தியின் அளவு, நீர் விரைந்து வரும் வேகத்தையும் அது பாய்ந்து விழும்