பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மருத்துவம்

மூலம் உடலின் உட்புறத் திசுக்களும் சின்னஞ் சிறு உடற்கூறுகளும் அவற்றின் தன்மைகளும் அறியப்பட்டன.

உடல் நோய்கள் பலவும் நோயுண்டாக்கும் நுண் கிருமிகள் மூலம் உருவாகின்றன என்பதை 1860இல் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டர் ஆவார். இவரது கண்டுபிடிப்புக்குப் பின் மருத்துவத் துறையின் வளர்ச்சி வியக்கத்தக்கதாகியது. 1895இல் ராண்ட்ஜன் எனும் ஜெர்மானியர் ஊடுகதிர் எனும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்தார். இதன்மூலம் உடலின் எந்த உறுப்பையும் படமெடுத்து, பாதிப்புகளை நுணுகி அறியமுடிந்தது. உரிய மருத்துவம் செய்ய இது வழியமைத்தது. இதன்பின் மருந்து வகைகளும் மருத்துவக் கருவிகளும் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட, புதிய வசதிகளோடு மருத்துவ மனைகள் அமையலாயின. முறையாகப் பயின்று தேறிப் பட்டம் பெற்ற மருத்துவர்களும் தாதிகளாகிய நர்ஸ்களும் மருத்துவத் துறையின் பேரங்கங்களாயினர். இன்று மருத்துவத்துறை எல்லா வசதிகளையும் கொண்டதாக உருவாகியுள்ளது. மருத்துவத்துறையை ஒழுங்குபடுத்தி சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் தக்க பாதுகாப்பு கிடைத்துள்ளது.

இன்று பல்வேறு வகையான மருத்துவமுறைகள் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றுள் 'அலோபதி' என்று கூறக்கூடிய ஆங்கில வைத்தியமுறையே இன்று புகழ்பெற்ற ஒன்றாக உலகெங்கும் பரவியுள்ளது. ஹோமியோபதி என்று கூறக் கூடிய ஜெர்மானிய மருத்துவ முறையும் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. ஆயுர்வேத மருத்துவமுறை பன்னெடுங்காலமாக, இந்தியாவில் இருந்து வரும் மருத்துவ முறையாகும். மூலிகைகளும் மூலிகை வேர்களுமே முக்கிய மருந்துப் பொருட்கள். பண்டு தொட்டே தமிழகத்தில் மருத்துவமுறையாக இருந்து வருவது சித்த மருத்துவ முறையாகும். தாவரப் பொருட்கள் மட்டுமல்லாது நீர்த்துப் பொடி செய்யப்பட்ட பாதரசம் போன்ற உலோகங்களும் காரங்களும் உப்புகளும் முக்கிய மருந்துப் பொருட்களாகும். யுனானி மருத்துவ முறை பாரசீக, அரபு நாடுகளிலிருந்து வந்து புழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். யுனானி மருந்துகள் பெரும்பாலும் திரவ வடிவிலேயே இருக்கும். இம்மருந்துமுறைகளைக் கற்பிக்கத் தனித்தனி மருத்துவக் கல்லூரிகள் உண்டு.

இன்று மருத்துவமுறைகளும் மருந்துகளும் பெருகி வருவது போன்றே புதுப்புது நோய்களும் தோன்றி வருகின்றன. மருத்துவத்துறை தொடர்ந்து வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது.


மருத்துவமனை : ஆங்கிலத்தில் 'ஹாஸ்பிட்டல்’ என்று அழைக்கப்படும். அமைப்புகளே தமிழில் 'மருத்துவ மனை’ என அழைக்கப்படுகின்றன. சாதாரண நோய்களுக்கு மருத்துவரிடம் மருந்து பெற்று வீட்டிலிருந்தபடியே மருந்துண்டு நோய் போக்கிக் கொள்ளலாம். சில சமயம் கடுமையான நோயாலோ அல்லது விபத்துக்கு ஆளானாலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசிய மேற்படும். ஏனெனில் மருத்துவமனையில் மருத்துவரின் மேற்பார்வையும் தாதியர்களாகிய நர்சுகளின் கவனிப்பும் சிகிச்சைக்குரிய கருவிகளும் இருந்து கொண்டேயிருக்கும்.

மருத்துவமனைகள் மிகச் சிறந்த சுகாதார முறையோடு அமைக்கப்பட்டிருக்கும். நல்ல காற்றோட்டமும் சுத்தமும் இருக்கும். அமைதியான சூழ்நிலை நிலவும். கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இதனால் நோயாளி முறையான சிகிச்சையும் நல்ல ஓய்வும் பெற முடிகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் நோயாளியையும் விபத்துக்கு ஆளானவர்களையும் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வர 'ஆம்புலன்ஸ்’ வண்டிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். அதில் வேண்டிய மருந்துகளும் சிகிச்சைக் கருவிகளும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். எல்லாவித நோய்களுக்குமாக அமைந்துள்ள மருத்துவமனை 'பொது மருத்துவமனை’ (General Hospital) என அழைக்கப்படும்.

ஒவ்வொரு வகை நோய்க்கும் தனித்தனி மருத்துவ மனைகள் உண்டு, தொற்று நோயாளிகளிடமிருந்து தொற்றுநோய் மற்றவர்கட்குப் பரவும் வாய்ப்பிருப்பதால் தொற்று நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் தனியாக இருக்கும். இவை அதற்கேற்ற தனி ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும். அதே போன்ற மன நோயாளிகளுக்கென தனியாக மனநோய் மருத்துவமனைகள் உள்ளன.

மருத்துவக் கல்வி கற்கவும் மாணவர்கள் எல்லாவித நோய்களையும் அவற்றின் தன்மை