பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வனேடியம்

267

குறையேதும் இல்லாத கண்ணாடித் துண்டுகளை லென்சின் வளைவு அளவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு 'கார்போரண்டம்' எனப்படும் நுண் சாணைக்கல்லில் நன்கு தேய்த்து குழி லென்சாகவோ அல்லது குவி லென்சாகவோ உருவாக்குவர். ஒளிக்கதிர்கள் சீராகச் செல்ல லென்சை ஒரே சீராக தேய்த்து அமைப்பர். தொலைநோக்காடி போன்ற பெரிய கருவிகளில் பயன்படுத்தக் கூடிய லென்ஸ்களை உருவாக்கப் பல மாதங்களாகும். இறுதி வடிவம் பெறும் லென்ஸ்களை மேலும் செம்மையாக்க ஒருவகை பசையால் மெருகிடுவர். சில உயர்வகை லென்ஸ்களை ‘ருக்’ எனப்படும் செந்நிற இரும்பு ஆக்சைடைக் கொண்டு சிறப்பு மெருகேற்றுவதும் உண்டு.

இக்காலத்தில் சில வகை லென்ஸ்கள் படிகக் கல்லைக் கொண்டும் ஒருவகைப் பிளாஸ்டிக்கைக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. மிகுந்த கவனத்தோடு நுண்மையாக உருவாக்கப்படுவதால் லென்ஸ்களின் விலையும் மிக அதிகமாகவே உள்ளன.

மருத்துவத் துறையில் நோய் நுண்மங்களைக் கண்டறிய வழி வகுத்தவர் நெதர்லாந்து நாட்டில் 1632இல் டெல்ஃப்ட் எனும் ஊரில் பிறந்த லேவன்ஹூக் ஆவார். இவர் கடையொன்றில் பணியாளராக வேலை செய்து வந்தார். தனது ஓய்வு நேரங்களில் நுண்பெருக்காடி கொண்டு பொருட்களைக் கண்ணுற்று ஆய்வதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தார். சாதாரண லென்ஸ்களைக்கொண்டு அமைத்த கருவியைக் கொண்டு ஆய்வு செய்து வந்தார். ஒரு சமயம் மழைத் துளியைக் கொண்டு ஆய்ந்தபோது அதில் ஓரணு பாக்டீரியங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். தொடர்ந்து ஆய்வு செய்து ஈஸ்ட் உயிரணுக்கள், இரத்த உயிரணுக்களையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றின் உருவங்களைப் படமாகத் தீட்டினார். இதே முறையில் தசைநார் அமைப்புகளையும் கண்டறிந்து அதையும் படமாக வரைந்து வைத்தார். இவரது கண்டுபிடிப்புகளும் படங்களுமே பிற்காலத்தில் மருத்துவர்கள் நோய் நுண்மங்களை விரிவாக ஆராய்ந்தறிய வழிகோலின.

இவர் தயாரித்துப் பயன்படுத்திய நுண் பெருக்காடி சாதாரணமானதாகும். எளிய தோற்றமுடைய அதில் இரண்டு தகடுகளுக்கிடையே லென்சைப் பொருத்தி, ஒரு துளையை கண்ணருகே வைத்து ஆராயும் வகையில் உருவமைக்கப்பட்டிருந்தது. சோதனைப் பொருள் அடிப்பகுதியில் வைத்து ஆராயப்பட்டது.

லேவன்ஹுக்

லேவன்ஹுக் கண்டறிந்த கண்டுபிடிப்புத் தகவல்களும் குறிப்புகளும் அவர் அவ்வப்போது வரைந்த படவரைவுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவை நூல் வடிவில் இன்று கிடைக்கின்றது.


வனேடியம் : இது ஒருவகை உலோகமாகும். கடினத்தன்மை மிக்க இஃது வெள்ளிய நிறமுடையதாகும். 1880இல் என். ஜி. செப்ட்ஸ்ராம் என்பார் ஸ்வீடன் நாட்டு கனிமங்களை ஆராய்ந்தபொழுது இவ்வுலோகத்தை கண்டறிந்தார். ஸ்காண்டினேவியன் கடவுளாகிய 'வனாடிஸ்’ பெயரினை இந்த உலோகத்திற்கு வைத்தார். இந்த உலோகம் கணக்கற்ற இணைத் திறன்களைக் கொண்டுள்ளதால், அநேக சேர்மங்களைத் தருகின்றது. புகைப்படத் தொழிலில் பயன்படும் வேதிப் பொருட்கள், மருந்துகள் தயாரிக்கவும், வண்ணப் பொருட்கள் உலரும் வேதிப் பொருட்களாகவும் பயன்படுகிறது. சல்ஃபூயூரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் இதன் ஆக்சைடு வனேடியம் பென்டாக்சைடு வினைவேக் மாற்றியாகப் பயன்படுகிறது.