பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனிச்சைச் செயல்

39

டர்பைனிலிருந்து வெளியேறும் நீராவியைக் குளிர்ந்த நீர்க்குழாய் மூலம் செலுத்துவார்கள். நீராவி குளிர்ந்து குறைந்த இடத்தை அடைப்பதால் அங்கு வெற்றிடம் ஏற்படும். எனவே கொதி கலத்திலிருந்து நீராவியை உறிஞ்சி டர்பைனுக்குள் செலுத்த, நீராவி டர்பைன் வேகமாகச் சுழன்று அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இவ்வாறு நீராவியைக் கொண்டு டர்பைன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சென்னை பேசின் பிரிட்ஜிலும் தூத்துக்குடியிலும் உள்ள அனல் மின் நிலையங்களாகும்.

வாயு டர்பைனைப் பயன்படுத்தி சிக்கன முறையில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு அடுக்கில் உள்ள அணுவில் பிளவை ஏற்படுத்தும்போது உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். இம் முறையிலேயே அனுமின் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய அணுமின் நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன. தமிழ்நாட்டில் கல்பாக்கம் எனும் இடத்தில் அணு அனல்மின் நிலையம் உள்ளது. கூடங்குளம் எனுமிடத்தில் இத்தகைய அணுமின் நிலையம் ஒன்று உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

அனிச்சைச் செயல் : நம் இச்சையோ, விருப்பமோ, சுய உணர்வோ இல்லாமல் ஒரு தூண்டுதலுக்கேற்ப தானாக நடைபெறும் செயலே 'அனிச்சைச் செயல்’ ஆகும். நம் சிந்தனையோ அதன் அடிப்படையில் ஏற்படும் முடிவோ எதுவுமே அனிச்சைச் செயலுக்குத் தேவைப்படுவதில்லை. நம்மையறியாமலே நாம் நிகழ்த்தும் செயலே அனிச்சைச் செயல்.

நாம் வெறுங்காலால் நடக்கும்போது கூரிய முள்ளோ அல்லது கல்லோ குத்திவிடுகிறது. நம்மையும் அறியாமல் காலை மடக்கி குத்திய பொருளை அகற்றுகிறோம். கொசுவோ எறும்போ நம்மைக் கடித்துவிட்டால் நம் கை விரைந்து சென்று அவற்றை அகற்றி, கடித்தவிடத்தை தடவுகிறது. நம்மையும் அறியாமல் நெருப்புப்பொறி நம் கைமீது பட்டவுடன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொள்கிறோம் அல்லவா? இவையெல்லாம் அனிச்சைச் செயலுக்கு உதாரணங்களாகும்.

எந்த ஒரு செயலையும் சிந்தித்துப் பார்த்து, முடிவு எடுத்துச் செயல்படுத்தினால் அது இச்சைச் செயல் ஆகும். அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில் நிகழும் செயலாகும். இச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், அனிச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுவதில்லை. அது தண்டுவடப் பகுதியிலிருந்தும் மூளையில் மற்றப்பகுதியின் உதவியினாலும் பிறப்பிக்கப்படுகிறது.

நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென வெளிப்புறத்திலிருந்து ஏற்படும் நிகழ்வு உடலில் ஒருவிதத் தூண்டுதலாக அமைகிறது. அத்தூண்டுதல் உடனடியாக நரம்புச் செய்தியாக உருப்பெறுகிறது. இச்செய்தி உணர்வு நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தண்டுவட நரம்பணுக்கள் இச்செய்தியைப் பெற்று, அதன் பொருளை உணர்ந்து, அதற்கேற்ற ஆணையை உடன் பிறப்பிக்கிறது. தண்டுவட நரம்பு இக்கட்டளையை உடலின் புறப்பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. இக்கட்டளையைப் புற உறுப்பு ஏற்று உரியமுறையில் செயல்படுத்துகிறது. இவ்வளவு செயல்களும் கண்மூடித் திறப்பதற்குள் மின்னல் வேகத்தில் விரைந்து நடந்து முடிந்து விடுகிறது.

முள் குத்தல் கடுமையாக இருப்பின் இச்செய்தி தண்டுவடக் கட்டளை நரம்பின் கிளை நரம்பு மூலம் மூளைப்பகுதியை அடைகிறது. அவ்வாறு சென்றடையும்போது நமக்கு வலி உணர்வு ஏற்படுகிறது. அனிச்சைச் செயலால் திடீரென ஏற்படும் பாதிப்பு மேலும் தொடராமல் தடுக்கப்படுகிறது.

அனிச்சைச் செயல்கள் இருவகைப்படும். சில அனிச்சைச் செயல்கள் எல்லோரிடமும் பொதுவாக அமைந்துள்ளது. முள் குத்தியவுடனே வெடுக்கென காலை எடுப்பது போன்ற செயல்கள். இவை பிறப்பு முதல் இறப்புவரை செயல்பட்டுக் கொண்டிருப்பனவாகும்.

மற்றொரு வகை அனிச்சைச் செயல்களும் உள்ளன. அவை அனுபவத்தினாலும் பழக்க வழக்கங்களாலும் உருவாக்கப்படுபவைகளாகும். இவை உடன் பிறவா அல்லது அனுபவ அனிச்சைச் செயல்கள் ஆகும். அனுபவம் இல்லாதவர்களிடம் இத்தகைய அனிச்சைச் செயல்கள் காணப்படுவதில்லை.