பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

உயிரணு

காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்ற திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டாரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும், அப்போது அச்சக்கரத்தின்மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அவ் விரும்புக் கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியைவிடச் சற்றுக்கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது 'எதிர் எடை’ என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும் போது இந்த எடை மேலே போகும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும்போது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்துக்கும் மிகச்சிறு அளவே வேறுபாடு இருக்கும். இந்தச் சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும்.

மக்கள் ஏறிச்செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தான்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தானை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும், ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கும் இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்குமெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. மற்றும் மாடிக் கடைகள், விமான தளங்கள், தரையடி இரும்புப்பாதைகள் போன்ற இடங்களின்படி ஏறி இறங்கும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ஏறி இறங்க மின்சார இயந்திரப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி நின்றால்போதும் நாம் போக வேண்டிய இடத்துக்குக் கொண்டு சென்று சேர்த்துவிடும். இத்தகைய ஏற்ற இறக்கப் படிக்கட்டு 'எஸ்க லேட்டர்’ என அழைக்கப்படுகிறது.

உயிரணு : செல் (Cell) என அழைக்கப்படும் உயிரணுக்கள் கட்டிடத்திற்குச் செங்கல் அமைந்திருப்பது போன்று உடலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளவை எனலாம். இவை வெறுங்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு நுண்மையானவைகளாகும். இந் நுண்ணுயிர்களை தொலைநோக்காடி கொண்டு மட்டுமே தெளிவாகக் காணமுடியும். ஒருசில நுண்ணுயிர்கள் மட்டுமே கூரிய பார்வையுடையவர்களால் வெறுங்கண்ணால் காணமுடியும். முட்டையில் உள்ள மஞ்சள் கருவும் உயிரணு வேயாகும். இதுவே உயிரணுக்களில் மிகப் பெரியது.

உயிரணுக்கள் ஒரே வித அளவும் வடிவும் கொண்டவைகள் அல்ல. அவை அளவிலும் வடிவிலும் வெவ்வேறானவையாகும். சில உயிரணுக்கள் சிவப்பணு போன்று தட்டையான வடிவில் இருக்கும். இதயம் தவிர்த்து பிற பகுதிகளிலுள்ள உயிர் அணுக்கள் சற்று நீண்ட வடிவினதாக இருக்கும். நரம்புப் பகுதியில் காணப்படும் உயிரணுக்கள் மயிரிழை போன்ற கிளைகளுடன் கூடியதாகக் காணப்படும்.

நம் உடல் மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள் ஆகிய உயிரினங்கள் அனைத்துக்கும் உயிரணுக்களே அடித்தளமாக அமைந்துள்ளன. இலட்சக்கணக்கான உயிரணுக்களைக் கொண்டே அவை இயங்குகின்றன. ஒரே உயிரணுவைக்கொண்டு உயிர் வாழும் பிராணிகள், தாவரங்கள் உண்டு. உதாரணமாக, அமீபா புரோட்டோசோவா போன்ற பிராணிகள் ஓர் உயிரணுவால் ஆனதாகும். அதே போன்று ஆல்கா, கிலாமிட்மோனாஸ், புரோட் டோப்பைட்டா போன்ற தாவரங்களும் ஒரே உயிரணுவைக் கொண்டவைகளாகும்.

உயிரணுக்கள் அனைத்தும் ஒரே வித வேலையைச் செய்வன அன்று. அவை சார்ந்துள்ள பகுதியின் உறுப்புகளின் தன்மைக்