பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

இதைவிடச் சமயப் பொறைக்கு, சமரச உணர்வுக்கு எடுத்துக்காட்டான செயலை எங்காவது காண முடியுமா?

மனித குலத்துக்கு இறைநெறி புகட்டி வழிகாட்ட வந்த அழகிய முன்மாதிரியான அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மதீனா நகர அரசமைப்புச் சட்டம் மூலம் சமய சகிப்புத்தன்மைக்கு இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இக்கால மக்கள் ஏற்றிப் போற்றத்தக்கவகையில் அன்றே பல்வேறு சமயச் சார்புள்ளவர்கள் சகிப்புணர்வையும் ஒற்றுமையையும் ஒருங்குணர்வையும் வெறும் சொல்லால் அல்ல, எழுத்து வடிவிலான சட்டம் மூலம் நிலை நாட்டிய பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்.

சமயப் பாதுகாப்பு மட்டுமல்ல
சமூகப் பாதுகாப்பும்

மதீனா நகர அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் அங்குள்ள பல்வேறு சமய சமூகத்தவரிடையே சமூகப் பாதுகாப்பை உருவாக்கியதாகும்.

ஏதேனும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பொருளாதார பாதிப்புக்கு ஆளானால் அச்சமயத்தை அல்லது சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பாதிக்கப்பட்ட வரை பொருளாதார முட்டுப்பாட்டினின்றும் காப்பாற்றுவது கடமையாகும் எனச் சட்டவிதி கூறியது. இதற்கிணங்க ஒவ்வொரு சமயச் சார்புள்ள சமூகத்தவரும் பாதிப்புக்கு ஆளான மற்றவர்க்கு உதவலாயினர். இதனால் யாரும் பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு. வேதனையுறும் நிலை இல்லாதாக்கப்பட்டது. ஏனெனில், ஒருவருக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினையை தொடர்புடைய அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையாகக் கருதி ஒருங்கிணைந்து உதவ முன் வந்தனர்.