பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118


இச்சம்பவத்தின் மூலம் நாம் இஸ்லாமிய நெறி, சமுதாயப் போக்குபற்றிய ஒரு மகத்தான உண்மையைத் தெளிவாக அறிந்துணர முடிகிறது. பைஸாந்தியப் பேரரசர்கள் தங்கள் சமயப் பிரிவை அடிக்கடி மாற்றிக் கொண்டார்கள். எண்ணிய போதெல்லாம் தன் மேனி வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் ‘பச்சோந்தி’யைப் போல் மாறிவரும் சூழலுக்கேற்ப தம் சமயப் பிரிவை ஏற்றுப் பேணுவதுபோல் தன் குடிமக்கள் அனைவரும் ஏற்று நடக்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதும் மறுப்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதும் அவர்தம் போக்காக அமைந்து வந்தது. இதனால், மக்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப சமயச் சார்புடையவர்களாக இருப்பதைவிட பைஸாந்தியப் பேரரசர்களின் போக்குக்கேற்ப செயல்படுவதையே தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாறுபட்ட கிருஸ்தவர் தன் கை, கால், காது, மூக்கு என அவயவங்களை இழக்க வேண்டும். சில சமயம் உயிரையும் இழக்க வேண்டும்.

அதே சமயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மாற்றுச் சமயத்தைச் சார்ந்த பிற சமயத்தவர்கள் முழுச் சுதந்திரத்தோடு, தங்கள் சமயத்தைப் பின்பற்ற, வழிபாடு செய்ய, சமயச் சடங்குகளை நிறைவேற்ற முழுமையாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மதச்சம்பிரதாயங்களில் நம்பிக்கைகளில் தலையிடவோ அவற்றைப் பற்றி விமர்சிக்கவோ திருமறையாகிய திருக்குர்ஆனும் பெருமானார் வாழ்வையும் வாக்கையும் விளக்கும் ‘ஹதீஸ்’களும் அனுமதிக்காததால் கிருஸ்தவர்களும் பிற சமயத்தவர்களும் முழுச் சுதந்திர உணர்வோடும் சுமுகமான சமுதாயச் சூழலோடும் தத்தமது சமய நெறிகளைப் பேணி நடக்க முடிந்தது.