பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122


முஸ்லிம்கள் எகிப்தை வெற்றி கொண்ட பின்னர் நைல் நதி வற்றிக் கொண்டே வந்தது. பழங்கால நம்பிக்கையில் மூழ்கியிருந்த எகிப்திய பெரியவர்கள் சிலர் எகிப்தின் இஸ்லாமிய ஆளுநரான அமீர் இப்னு அல்-அஸ் என்பவரிடம் தங்கள் வழக்கப்படி, தங்கள் மத அனுஷ்டானப்படி அலங்கரிக்கப்பட்ட அழகிய பெண்ணை நைல் நதிக் கடவுளுக்குப் பரிசளிப்பதன் மூலம் மீண்டும் நைல் நதியில் வெள்ளப் பெருக்கெடுக்க வழி செய்யுமாறு வேண்டி கடிதம் எழுதினார். இதற்கு ஆளுநர், நைல் நதி முகவரிகளோடு கூடிய கடிதமொன்றை அவர்கட்கு அனுப்பினார்; அதில் ‘நைல் நதியே! உன் விருப்பப்படி பெருக்கெடுத்தால், நாங்கள் உன்னை வேண்டத் தேவையில்லை; அவ்வாறின்றி இறைவன் உன்னைப் பொங்கியெழச் செய்வதாயின், அவ்வாறே நிகழ நான் இறைவனை இறைஞ்சுகிறேன்’ என இறைவனை வேண்டி கடிதம் எழுதியிருந்ததோடு முன்பு அழகிய பெண்ணை மூழ்கடித்தது போல் நைல் நதியில் அக்கடிதத்தை மூழ்கடித்தார்கள். இறைவனது பேரருளால் நைல் நதி பொங்கியெழுந்தோடியது. அன்று முதல் பெண்ணை நதியில் மூழ்கடிக்கும் மூட நம்பிக்கையும் மறைந்தொழிந்தது.

இவ்வாறு பழைய பழக்க வழக்கங்களில் ஏற்புடையவற்றை ஏற்றும் ஏற்கத் தகாதவற்றை நீக்கியும் செயல் பட்டனர் இஸ்லாமிய ஆட்சியினர்.

பெண்ணின் நலன் காத்த மற்றொரு சம்பவம்

பெண்ணின் பெருமைக்கும் சிறப்புக்கும் எதிரான பழக்க வழக்கங்கள் எங்கிருந்தாலும் அவற்றை அடியோடு ஒழித்துக் கட்டப்பட்டன என்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்ட முடியுமெனினும் அவற்றில் ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.