பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

“இஸ்லாமும், சமய நல்லிணக்கம்” என்ற இந்த அரிய ஏட்டினை என்னிடம் தந்து, இதற்கு ஒரு முகவுரை வழங்குமாறு அருமை நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் கூறினார். முன்னுரையிலிருந்து இறுதிவரை படித்தேன். ஒரு சிறிய 228 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் இவ்வளவு அதிகமான விவரங்களை, அவரால் சொல்லப்பட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஏனெனில் இந்த அளவு விவரங்களை வைத்துக் கொண்டு சிலர் இரண்டு மூன்று புத்தகங்களை எழுதி முடித்துவிடுவர். சமூக நலனையும் நாட்டு நலனையும் காக்கும் நோக்குக் கொண்டவர் என்பதால் பொருள் நாடும் எண்ணத்தை விட்டு, நலன் நாடும் பணியில் இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது என் கருத்து.

இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர் இஸ்லாமியருக்கே எழுதிக் கொண்டிருப்பது, பேசிக் கொண்டிருப்பது தமிழக முஸ்லிம்களின் நிலை. முஸ்லிம்கள் கூடும் மசூதிகளாகட்டும் மாநாடுகளாகட்டும் இவைகள் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழில் வெளியிடப்படும், இஸ்லாமிய சமய நூல்களை வாங்கிப் பாருங்கள், இது நன்கு விளங்கும். அவைகளில் காணப்படும் நடையும் சொற்களும் இன்னும் அதிகமாகவே நான் மேற் சொன்ன கருத்தைத் தெளிவுபடுத்தும். ஆனால் மணவையார் அவர்கள் இந்த நூலில் தன் கருத்துகளை முஸ்லிம்களும் மற்றவர்களும் படிக்க வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இனிய எளிய தமிழில் அரபு வார்த்தைகளைக் குறைத்து (தவிர்த்து) எழுதியுள்ளார். இவர் தொடர்ந்து இந்தத் திருப்பணியில் இயங்க வேண்டும்.