பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


பெருமானாரின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரையொன்றை எழுதியனுப்புமாறு ‘தினமணி’ ஆசிரியர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதி அனுப்பினேன்.

அன்று இரவு ஒன்பது மணியளவில் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நான் அனுப்பியிருந்த கட்டுரையை அப்போதுதான் படித்து முடித்ததாகவும் உடனடியாகத் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து அவர்: “அண்ணலார் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்த போது நீண்ட காலமாக எனக்கிருந்த பல ஐயப்பாடுகள் அகன்று விட்டன. ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்’ கட்டுரையின் கருத்துகள் இன்றைய உலகு முன் உரத்த குரலில் ஒலிக்கப்பட வேண்டியவை. இக்கருத்துகள் உரிய முறையில் பரப்பப்படாததாலேயே தேவையற்ற பல பிரச்சினைகள் இன்று நம்மிடையே தலைதூக்கிக் கூத்தாட்டம் போட நேர்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கட்டுரை மட்டும் எழுதியதாக நான் கருதவில்லை. இதன் மூலம் இன்றையத் தேவையை நிறைவு செய்ய அற்புதமான சமூக சேவையைச் செய்திருப்பதாகவே கருதி மகிழ்கிறேன். உடனே உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற உந்துதலாலேயே உங்களுக்கு உடனடியாகப் போன் செய்தேன்.” எனத் தன் அறிவுப் பூர்வமான உள்ளுணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.