பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


ஒன்றே குலம் ஒருவனே தேவன்

அரபு வணிகர்கள் மூலமும், முனைப்புடன் இஸ்லாமியச் செய்தியை உலகெங்கும் பரப்ப விழைந்த நபித் தோழர்களின் வாயிலாகவும் அண்ணலார் காலம் முதலே இங்கு இஸ்லாம் கால் பாவத் தொடங்கியதெனலாம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற மூலமந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாமிய மார்க்கம் தமிழகத்தில் அழுந்தக் காலூன்றக் காரணம் அதே இறைக் கொள்கையையும் சமுதாய நோக்கையும் சங்ககாலம் தொட்டே தமிழகம் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்ததுமாகும். காலவோட்டத்தில இவ்வுயர் சிந்தனைகளை எங்கோ இழந்துவிட்டு நின்ற தமிழகத்தில் மீண்டும் அவ்வுயர் சிந்தனைகள் எதிரொலிக்கத் தொடங்கியவுடன், காணாமற் போன தன் அன்புச் செல்வத்தை மீண்டும் பெற்று மகிழும் தாயின் மகிழ்ச்சியில் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று முழங்கிய இஸ்லாத்தை தமிழகம் ஏற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை.

இஸ்லாம் ஆனவனே தவிர
ஆக்கப்பட்டவன் அல்ல

இன்றும் தமிழக முஸ்லிம்களில் யாராவது ஒருவரைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று வினாத் தொடுத்தால் அடுத்து வரும் பதில் “நான் ஒரு இஸ்லாமானவன்” என்பதாகவே இருக்கும். இதிலிருந்து தானாக இஸ்லாமியநெறியை ஏற்று அதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இஸ்லாம் ஆனவனே அன்றி யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தி ‘இஸ்லாம் ஆக்கப்பட்டவன் அன்று’ என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.