பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


மனித குலம் முழுமையும் ஆதாமின் வழி வந்த சந்ததி யினரே என்ற எண்ணத்தில் நாடு, மொழி, மத வேறுபாடின்றி அனைவரையும் நேசிக்கும் இனிய மனம் படைத்தவராக விளங்கினார் மாநபி (சல்) அவர்கள்.

ஒரு சமயம் மதீனா நகருக்கு வெளியிலிருந்து நபிகள் நாயகம் (சல்) அவர்களைக் காணச் சிலர் ஒரு குழுவாக வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வேற்றுச் சமயங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தின்பால் கடும் வெறுப்பும் பகையுணர்வும் கொண்டவர்கள். எனினும், மதீனமா நகரின் மாபெரும் சக்தியாக உருமாறிவரும் நாயகத் திருமேனியை நேரில் சந்தித்து, பல்வேறு விஷயங்களைப் பேசி முடிவு காண வந்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் பெருமானாரோடு நீண்டநேரம் விவாதிக்கவே நேரம் கடந்துவிட்டது. இரவு நேரமாகி விட்டதால் வந்திருந்த மாற்றுச் சமயத்தவர்களை முஸ்லிம்கள் வீட்டிற்கொருவராக அழைத்துச் சென்று விருந்தளிப்பதென முடிவாயிற்று.

குழுவில் வந்திருந்த மாற்றுச் சமயத்தவர்களில் மிகவும் முரடனாகவும் துஷ்டனாவும் தோற்றமளித்த ஒருவன் இருந்தான். அவன் பார்வையையும் முகபாவனையையும் அங்கசேஷ்டைகளையும் கண்ட முஸ்லிம்கள் யாரும் அவனை விருந்துக்கழைத்துச் செல்ல விரும்பவில்லை. இதையறிந்த பெருமானார் (சல்) அவர்கள் அத்துவிட விருந்தாளியைத் தன் வீட்டிற்கு வந்து விருந்துண்ணுமாறு கூறி அழைத்துச் சென்றார்.

அண்ணலாரின் வீட்டார் தங்கள் குடும்பத்துக்கு வேண்டிய உணவை மட்டும் அன்று தயாரித்திருந்தனர்.