பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


திருமறையாம் திருக்குர்ஆன் பல்வேறு சமயங்கள் பற்றி, அவற்றைத் தோற்றுவித்த இறை தீர்க்கதரிசிகளைப் பற்றி, இறை வாக்காகக் கூறும் இறைவசனங்கள் அடிப்படையில் தரப்படும் தகவல்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இந்திய சமயாச்சாரியர்கள் இந்தியாவில் மட்டும்
இஸ்லாமிய தீர்க்கதரிசிகள் உலகெங்கும்

பழம்பெரும் சமயங்களான, ஹிந்து சமயம், சமண சமயம், புத்த சமயம் ஆகியவற்றைத் தோற்றுவித்த தீர்க்கதரிசிகள் அனைவரும் இந்தியாவில் மட்டுமே தோன்றியிருக்கிறார்கள். இம்மதாச்சாரியர்கள் யாரும் இந்தியாவுக்கு வெளியே தோற்றம் பெற்றதாக வரலாறே இல்லை.

அதே போன்று, யூத, கிருஸ்த தீர்க்கதரிசிகள் அனைவருமே பாலஸ்தீனத்தில் மட்டுமே தோன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய தீர்க்கதரிசிகள் - இறை தூதர்களாகிய நபிமார்கள் உலகெங்கும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமிய இறை தூதர்களாகிய நபிமார்கள் பிறக்காத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றியிருக்கிறார்கள். வேறு சில நபிமார்கள் ஒரு இனமக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். மற்றும் சில நபிமார்கள் ஒரு மொழி பேசிய மக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். ஆனால், இறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக மக்களை வழி நடத்த வந்துதித்த வள்ளல் நபியாவார்.

உலகெங்கும் நபிமார்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் சம்பவமொன்று அண்மையில் நடைபெற்றது.