பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226


தனித்த செல்வாக்கால் உலகத்தினுடைய வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்தவர்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை வரிசைப்படுத்தும் அருமையான நூல் அது. அதிலே முதலாமவராக அண்ணலார் பெயரைப் பொறித்துள்ளார் என்பதும் நீங்களெல்லாம் அறிந்த செய்திதான். முதலாமவராகத் தெரிவு செய்ததற்கான காரணத்தை விளக்கும்போது, ‘நேற்றைய வரலாறும் அண்ணலாரால்தான் மாறியது; இன்றைய உலக வரலாறும் அவரது செல்வாக்கால்தான் மாறிக் கொண்டுள்ளது. நாளைய உலக வரலாற்றையும் அவரது வாழ்வும் வாக்குமே முற்றாக மாற்றியமைக்கும். அத்தகு வல்லமை மிக்கது அவரது வாழ்வும் வாக்கும்” என்பதை மிகத் தெளிவாகவும் திடமாகவும் கூறுகிறாரென்றால் அந்த அளவுக்கு இறைத்தூதரின் வாழ்வும் வாக்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழத்தக்கதாக இறைவன் அமைத்துத் தந்துள்ளான் என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும். உலக மாறுதலுக்கும் - மாற்றத்திற்கும் அண்ணலாரே அச்சாணி என்பதை இன்றைய அறிவுலகு புரிந்து கொண்டு வருகிறது.

என்றும் மாறாது

அண்மையில் அந்த நூல் திருத்தப் பதிப்பாக வெளி வந்தது. சிலருடைய பெயர் நீக்கப்பட்டது. கோர்பச்சோவ் போன்ற சிலருயை பெயர் இணைக்கப்பட்டது. இதே போல் காலப் போக்கில் இப்போதுள்ள வரிசை முறை மாறிக் கொண்டே செல்லுமா? என்று கேட்டபோது “மற்றவர்களின் வரிசை முறை வேண்டுமானால் மாறலாமே தவிர, நபிகள் நாயகத்தின் முதன் நிலை எக்காரணம் கொண்டும் மாறாது” எனக் கூறினார் என்றால், பெருமானார் மீது ஹார்ட் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது.