பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232


போனால் இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்பியவர்கள், இறை நெறியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்தவர்கள் இந்த சூஃபிமார்கள்தான். ஆனால், இந்திய வரலாறைச் சரிவர உணர்ந்து தெளியா ஆங்கில வரலாற்றாசிரியர்கள், தங்கள் ‘பிரித்தாளும்’ சூழ்ச்சி காரணமாக ‘இந்தியாவில் இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டது’ எனத் தவறாகக் குறிப்பிட்டு, பழி பாவத்துக்கு ஆளாயினர்.

இந்தியாவை 600 ஆண்டுக்காலம் கட்டியாண்ட முஸ்லிம் மன்னர்கள் யாருமே இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளைக் கூட முழுமையாய் நிறைவேற்றாதவர்கள் என்பது கசப்பான உண்மை. டெல்லியிலிருந்து ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களில் யாருமே ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. இஸ்லாமியப் பெருங்கடமைகளையே நிறைவேற்ற முடியாத இவர்கள் எங்கே இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியிலே ஈடுபட்டிருக்க முடியும்? இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் பழிபோட வேண்டும், தூற்ற வேண்டும் என்பதற்காகக் கற்பனையாக இட்டிக்கட்டி கூறுகின்ற ஒன்றே இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற பழிச் சொல்.

அப்படியானால் இஸ்லாமிய நெறியை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் யார்? இக் கேள்விக்கு மிக எளிமையாக இஸ்லாமியச் சூஃபிமார்களாகிய மெய்ஞ் ஞானிகளும் இறையடியார்களாகிய வலிமார்களுமே அவர்கள் எனக் கூறிவிடலாம். பீரப்பா, குணங்குடி மஸ்தான் போன்ற மெய்ஞ்ஞான மேதைகளும் டெல்லியில் அடக்கமாகியுள்ள நிஜாமுதீன் அவுலியா, ஆஜ்மீரில் அடக்கமாகியுள்ள குவாஜா மொய்னுதீன், திருச்சியிலே அடக்கமாகியுள்ள நத்தர்ஷா, நாகூர் சாஹூல் ஹமீது ஆண்டகை போன்ற அவுலியாக்களும் சதக்கத்துல்லாஹ்