பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237


என்பதில் முழு நம்பிக்கை கொண்டு விட்டால் அவன் சாதி, வகுப்பு, பிரிவுகள் ஏதுமில்லாதவனாகிவிடுகிறான். அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்டு மனிதத்துவம் உள்ள மனிதனாக மட்டும் கருதப்படுகிறான். மனித குலம் முழுமையையும் ஆதித் தந்தை ஆதாம் வழி வந்த சகோதரர்களாகக் கருதி, உலக சகோதரத்துவம் நிலைபெற உறுதி ஏற்கிறான் என்ற உணர்வும் கருத்தும் அவர் உள்ளத்தை ஈர்க்க அக்காலத்தில் பஞ்சமர்களாக, தீண்டத்தகாதவர்களாக புழுப் பூச்சிகளைப்போல் கருதி நடத்தப்பட்ட சேரிவாழ் ஹரிஜனங்களை அழைத்து, அவர்கட்கு வேதத்தைப் புகட்டி, வேதியர்களாக்கியது அக்காலத்தில்அவர் நிகழ்த்திக் காட்டிய அதியற்புதப் புரட்சியாகும். ஹரிஜனங்களுக்கு வேதம் கற்பித்ததோடு அவர்கட்கு ஆகம விதிப்படி, இந்து சமய சம்பிராதாயப்படி பூணூல் அணிவித்து வேதியர்களாக ஆக்கி, அவர்கட்கு ‘ஐயங்கார்’ எனப் பெயரிட்டழைத்தார் என்றால் அவர் செய்த புரட்சி எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள். அதனால்தான் இன்றும் ஐயர் வெண்மையாகவும், ஐயங்கார் கறுப்பு நிறத்தவராகவும் இருப்பதைக் காண்கிறோம்.

இப்படி இந்து சமயத்திலே மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட, இஸ்லாம் காரணமாக இருந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

சைவ சமயமும் இஸ்லாமும்

இது மட்டுமல்ல, தென்னாட்டிற்கே சொந்தமான சமயம் எனக் கொண்டாடப்படும் சைவ சமயத்திலேயும் மாற்ற திருத்தங்களோடு வீர சைவம் உருவாக ஒரு வகையில் இஸ்லாமும் இஸ்லாமியக் கருத்துகளும் சிந்தனைகளுமே காரணமாயமைந்துள்ளன என்பது வரலாறு.

தென்னகத்தின் மிகச் சிறந்த சமயமாக அன்றும் இன்றும் போற்றப்படுவது சைவ சமயமாகும். மாணிக்க வாசகர் போன்றவர்களால் உருவாக்கி, வளர்க்கப்பட்ட சமயம்.