பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

255



'திக்ர்' தரும் செய்தி

ஐம்புலன்களை அடக்கி, இதயமெல்லாம் இறையுணர்வுப் பொங்கிப் பொழிய இஸ்லாம் பல வழிகளைக் காட்டுகின்றது. அவற்றுள் புகழ் பெற்ற பெருவழியாக இஸ்லாம் இனம் காட்டுவது 'திக்ர் ' ஆகும். திருமறை பிறந்த அறபுச் சொற்களில் சிலவற்றை ஓசையோடும் வெளி ஒசையின்றி உள்ளொலியோடும் திரும்பத் திரும்பச் சொல்லி உச்சாடனம் செய்யப்படுகிறது. உள்ளும் புறமும் எழுப்பப்படும் இச்சொற்களின் ஒசை மூளைப் பகுதியின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒருவித அதிர்வை உருவாக்கு கின்றன என்று ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் ஒருவர் கண்டறிந்துள்ளார். உச்சரிக்கப்படும் சொற்களின் ஓசைக்கேற்ப தொடர் லயமாக மூளைப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகள் அவனைப் பிற சிந்தனைகளிலிருந்து விடுபடச் செய்து ஆன்மீக உணர்வை தொடர்ந்து உருவாக்கிப் பலப்படுத்துகிறது. அது 'திக்ர்' செய்பவருக்கு ஒருவித இன்ப உணர்வை, பேரானந்தத்தை, இதற்குமுன் அனுபவித்திராத ஒரு புதுவித இறை அனுபவ உணர்வை அவருக்கு ஊட்டி மகிழ்விக்கிறது. இது ஒருவித இறை தியானமாக அமைந்து, அவனுள் இருக்கும், இறைவனிடமிருந்து பெற்ற ஆன்மாவைத் தட்டி எழுப்புகிறது. விழித்துக் கொண்ட ஆன்மா அவனை இறைவனை நோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இவ்விதம் தொடர் 'திக்ர்' பயிற்சியின் மூலம் ஆன்ம விழிப்பும் இறை நெருக்கமும் பெற ஏதுவாகிறது. இஃது அண்மைக் காலத்தில் அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு வருகிறது.

ஆன்மீக உணர்வு பெற நாம் மேற்கொள்ளும் திக்ர் பயிற்சியின்போது மூளைப் பகுதியில் ஏற்படும் அதிர்வு அதிகரிக்க அதிகரிக்க நாம் ஆன்மீக உணர்வின் அனுபவத்தின் உச்சத்தையே எட்ட முடிகிறது என்பதை இன்று அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளது வியப்பாக இருக்கிறது.