பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256


ஆன்மீகமும் அறிவியலும் வேறு அல்ல

ஆய்ந்து பார்த்தால் ஆன்மீகமும் அறிவியலும் இணைந்து, முழுமையான இஸ்லாமிய அறிவை-இறை நெறியை முழுமையாக அறிந்துகொள்ள ஏதுவாயமை கிறது. அறிவியல துறையையும் ஆன்மீகத் துறையும் முரண் பட்டனவாக கருதுவது உண்மைக்குப் புறம்பானதாகும். சுருங்கச் சொன்னால் மனிதரின் இரு கண்களும் முழுமையான பார்வையைப் பெறத்துணை செய்வதைப் போன்று ஆன்மீகமும் அறிவியலும் இஸ்லாத்தின் இரு பெரும் கண்களாக அமைந்து இறைநெறியின் முழுத்தோற்றத்தை வழங்கி, மனிதனை அதன் வழி வாழத் தூண்டுகின்றன. இவ்விரு துறைகளின் உற்ற துணையோடு வாழ முனையும் ஒவ்வொரு முஸ்லிமும் மனிதர்களில் மேம்பட்டவர்களாக-மனிதப் புனிதர்களாக வாழும் பேற்றைப் பெறுகின்றார்கள்.

இந்த இருபெரும் துறைகளின் இணையும் துணையும் மனிதகுல வாழ்வை மாண்புடையதாக்கும் இருபெரும் சக்திகளாகும்.

உடல் தோல் பேசும்

திருமறையில் கூறப்படும் ஆன்மீகச் செய்திகளுக்கு அறிவியல் ஒளி பாய்ச்சப்படும்போது, அவற்றின் அடிப்படை உண்மைகள் தெற்றென விளங்குகின்றன. சான்றாக ஒன்றைப் பார்ப்போம்.

இறுதித் தீர்ப்பு நாளின்போது இறைச் சன்னிதானத்தில் விசாரணைக்காக நிற்கும்போது, நிற்பவர்களின் வாய் பேசாது. அப்போது, "மறுமையில் மனிதனின் ஒவ்வொரு உறுப்பும், அவனுடைய உடல்தோலும் பேச ஆரம்பிக்கும். அவை இவ்வுலகில் மனிதன் செய்த ஒவ்வொரு செயலைப்பற்றியும் ஓர் அணுவும் விடாமல் அப்படியே ஒப்புவிக்கும். மனிதனுக்கு அவனுடைய உடல் உறுப்புகளே சாட்சி பகரும்" என்பது திருக்குர்ஆன்.