பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

தொடர்வதோடு, கியாமத்து நாள்வரை உங்களைத் தொடர்ந்து வரும். நாளை மஹ்ஷர் மைதானத்தில், இறைவன் முன்னிலையில், உங்கள் நன்மை தீமைகள் தராசுத் தட்டில் வைத்து கணக்கு வழக்குப் பார்த்து நீதி வழங்கும்போது, நீங்கள் வாழும்போது, உங்களைப் பற்றி ஆய்வு செய்து பெற்ற மெய்ஞ்ஞானப் பயன்கள் உங்களுக்குப் பெருந்துணையாயமைந்து இறையருளைப் பெற்றுத் தரும் சாதனமாக அமைகிறது எனலாம்.


பல்வேறு சமயங்கள் சுட்டிக்காட்டுவது போல் மனிதன் என்பவன் ஏதோ ஒரு உயிரினம் மட்டுமில்லை. சில சமயங்கள் சொல்வதுபோல் பாவப் பிண்டமும் அல்ல; இன்னும் ஒரு சில சமயங்கள் கூறுவதுபோல் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா எனப் பண்டாரப் பாட்டுத் தத்துவப் பொருட்கள் அல்ல; இஸ்லாம் கூறும் மனிதக் கணிப்பு மிக அற்புதமானது.


இறை ஆத்மா பெற்றவன் மனிதன்!

இஸ்லாமிய மார்க்கம் மனிதனைப் பொருத்தவரை மிகப் புனிதமானவனாகக் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் இறையம்சம் பொருந்தியவனாகக் கருதப்படுகிறான். இறையம்சமாகவே உருவாக்கப்பட்டவன். ஆம்! மனிதன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்பதுதான் இஸ்லாமியக் கொள்கை.


மனிதனை உருவாக்க விழைந்த இறைவன் ஐம்பூதச் சேர்க்கையோடு கூடிய மண்ணால் உருவைச் சமைத்து அதனுள், தன் ஆத்மாவிலிருந்து ரூஹை ஊதி, மனித உருவுக்கு உயிர் கொடுத்தான். இறை ஆத்மாவின் ஒரு பகுதி மண்ணாலான மனித உடலுக்குள் புகுத்தியதனால் இறைவனுடைய அம்சத்தைப் பெறுவது தவிர்க்க முடியாததாகியது.


ஆனால், மனித உடலுள் இறைவனால் புகுத்தப்பட்ட