பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

271


ஒரு மார்க்கம் சொல்லுகிறது "இறைவன் ஒருவனே; அவன் இணை துணை இல்லாதவன்; பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; அவன் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியும் இல்லை; அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை; அவன் எந்தத் தேவையும் இல்லாதவன்; அவன் கொடுப்பவனே தவிர எதையும் பெறுபவன் இல்லை.” என்று கூறுகிறது.

மற்றொரு மதம் "இறைவன் ஒருவரல்ல; பலர். இறைவனோடு இறைவியும் உண்டு. இறைவனுக்கு மனைவி, மக்கள் உண்டு. உற்றார் உறவினர் உண்டு” என்று சொல்லுகிறது. எதிர் எதிரான இவ்விரு இறைக் கோட்பாடுகளும் எப்படி ஒன்றாகும்.

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள், இஸ்லாம் மார்க்கம் மனிதனுக்கு இறப்புக்குப் பிறகு பிறவி இல்லை என்கிறது. உயிரோடு வாழும்போதே அவனுக்குப் பிறவி உண்டே தவிர இறப்புக்குப்பிறகு அவன் மறுபிறவி எடுப்பதே இல்லை. எண்ணிப் பாருங்கள், நாம் வாழும் காலத்திலேயே மனைவியின் உறுதுணையோடு மகனாகவும் மகளாகவும் பிறவி எடுக்க முடிகிறது. கணவனின் இந்திரியத் துளியிலிருந்து உருவாகி வெளிப்படும் ஓர் உயிரணு மனைவியின் யோனிக் குழாயில் உருவாகியுள்ள முட்டையோடு சேர்ந்து, கருப்பையினுள் புகுந்து சிசுவாக வளர்ந்து வெளிப்படுகிறது. இவ்வாறு கணவனும் மனைவியும் உயிர் வாழ்கிறபோதே தங்கள் சந்ததிகளை பிறவி எடுக்க வைக்கிறார்களே தவிர இருவரும் இறந்த பின் ஏதும் உருவாவதில்லை என்பது அறிவியல் சித்தாந்தம்.

இறப்புக்குப்பின் அவன் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப உயர் பிறவியாகவோ அல்லது பூச்சி, புழு போன்ற தாழ்ந்த பிறவியாகவோ பிறப்பார்கள் என்பது பிற சமயங்கள் கூறும் அழுத்தமான கோட்பாடு.

8