பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) முதல் ஈசா (அலை)வரை உலக மக்களுக்கு இறைநெறி புகட்ட வந்த நபிமார்கள் அனைவருமே ஆன்மீக வாழ்வு பற்றி மட்டுமே பேசியிருக்கிறார்கள்.

ஆன்மீகத்தோடு அறிவியல் பேசியவர் அண்ணலார்

ஆனால், இறுதி இறைத் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மட்டுமே ஆன்மீகத்தையும் பேசினார்; அறிவியலைப் பற்றியும் பேசினார் என்ற பேருண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆன்மீகமும் அறிவியல் தொடர்புடையதேயாகும் என்பதை இன்றைய நவீன விஞ்ஞான ஆய்வு புலப்படுத்தி வருகிறது. ஆன்மீக உணர்வைப் பெருக்கும் வழியாகத் ‘திக்ர்' செய்கின்றோம். அப்போது, இறையுணர்வூட்டும் வாசகங்களையும் சொற்களையும் உள்ளும் புறமுமாக தொடர் ஒலி எழுப்பி உணர்வோட்டம் பெறுகிறோம். அப்போது இறையின்ப உணர்வு நெஞ்சமெல்லாம் நிறைகிறது.

இதைப்பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்ந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள். 'திக்ர்' செய்யும் போது உச்சரிக்கப்படும் ஒலிகள் தொடர்ந்து மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாக்கி அதிர்வுண்டாக்குகிறது. அந்தப்பகுதியில் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக ஒருவித ஆன்மா உணர்வு எதிர் லய உணர்வாக அவனுள் எழுந்து, அவனை ஆழ்மன உணர்வாளியாக ஆக்குகிறது என்பது அவர்தம் கண்டுபிடிப்பாகும்.

இனி, இந்த உலகுக்கு இறைத் தூதர் எவரும் வரப்போவதில்லை. இனி எந்த வேதமும் இறைவனிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. இறுதி நபியாக அண்ணலாரும் இறுதி வேதமாக புர்கானும் மனித குலத்துக்கு வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்டு விட்டது.