பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

சென்று சீர்கல்வி பெறத் தூண்டினார் பெருமானார் (சல்) அவர்கள்.

ஆய்வு வேட்கை கொண்ட அரேபியர்

அண்ணலார் அறிவுறுத்தியதன் உள் கருத்தை - நோக்கத்தை உய்த்துணர்ந்த அரபிகளில் சிலர் சீன நாடு சென்றனர். அங்குக் கண்டுபிடிக்கப்பட்டவைகளையும், கண்டுபிடிப்பு முயற்சிகளையும் நேரில் கண்டு வியப்படைந்தனர். அவைகளைத் தாங்களும் கற்க முயன்றனர். ஆனால், அந்த விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தவோ அவற்றின் ஆய்வு முறைகளைக் கற்பிக்கவோ சீனர் மறுத்து விட்டனர். இதனால் சினமுற்ற அரபிகள் தாள் செய்யும் வித்தை தெரிந்த சில சீனர்களைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு, அரபகம் திரும்பினர். தாள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தால் விடுதலை வழங்குவதாக வாக்களித்தனர். இதை ஏற்ற சீனர்கள் அரபுகளுக்கு தாள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால், தாள் செய்வதற்குத் தேவையான மரக் கூழ்களை உருவாக்குவதற்கான மூங்கில்களோ பிற மரங்களோ அரேபிய பாலைவனத்தில் இருக்கவில்லை. பேரீச்ச மரங்களும் காய்கறிச் செடிகளும் ஒருவகை முட்செடிகளும் மட்டுமே அங்குக் கிடைத்தன.

சீனர்களுடன் அரபிகளும் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னர், கிடைத்த மூலப் பொருள்களைக் கொண்டே மிகச் சிறந்த தாளை - அன்று சீனத்தில் உருவாக்கப்பட்டதை விட பல மடங்கு உயர்ந்த தாளை - பேப்பரை - அரபிகளால் உருவாக்க முடிந்தது. அன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த தாளைச் செய்யும் முறையைக் கண்டுபிடித்த பெருமை அரபிகளைச் சென்றடைந்தது. தொடர் முயற்சிகள் ஆங்காங்கே முளைவிட்டு வளமாக வளரத் தொடங்கின என்பது வரலாறு.