பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


இன்று உயிர் வர்க்க தோற்ற வரலாற்றை ஆராய முற்படுவோர் டார்வின் தியரியை - டார்வினின் கொள்கைகளை துணைக்கக்கழைக்கத் தவறுவதே இல்லை.

டார்வினின் உயிரினத் தோற்ற வரலாறு பற்றிய கொள்கைகள் மிகச் சிறந்த கொள்கைகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், அக்கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள், சரியாகப் புரிந்து கொண்டார்களா என்பது தான் ஐயப்பாட்டிற்குரியது.

உயிரினத் தோற்ற வரலாற்றை ஆராய்ந்த டார்வின் 'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்' எனப் பலரும் கூறுவதுண்டு. இஃது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, சார்லஸ் டார்வினைச் சரியாக அறியாதவர்களால் கூறப்படும் கூற்றுமாகும். குரங்கிலிருந்து மனிதன் தோற்றம் பெற்றான் என்று ஒரு இடத்தில் கூட டார்வின் சொல்லியதாகத் தெரியவில்லை. அவர் கூறியதெல்லாம் மனிதனுக்கும் குரங்கிற்கும் நெருங்கிய அம்சம் உண்டு என்பதுதான். மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவனாக இருந்தால், உருமாறியவனாக இருந்திருந்தால் அந்த மூல வடிவிலான உயிர் - குரங்கு இந்நேரம் அழிந்திருக்க வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று உருமாறியிருந்தால் முன்னது அழிவதன் மூலமே பின்னது நிலைபெற இயலும். இது இயற்கையின் நியதி. ஆனால், மனிதனும் முழு உருவில் தெளிவாக இருக்கிறான். குரங்கும் முழு வடிவில் திரிந்து கொண்டுள்ளது. எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்திருக்க முடியும். இதிலிருந்தே இக்கொள்கை தவறாகப் பரப்பப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகவில்லையா?

நீரிலிருந்தே உயிர் வர்க்கங்கள்

மனிதனைத் தவிர, மற்ற உயிர் வர்க்கங்கள் அனைத்தும் நீரிலிருந்து தோன்றி வளர்ந்தன என்பதுதான் சார்லஸ் டார்வின் கண்டறிந்து கூறிய உயிரினத் தோற்ற வரலாறு.