பக்கம்:ஈச்சம்பாய்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

101


பறவைகள், அதை இரையாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை வயிற்றைக் கொத்திய சிட்டுக் குருவிகளை விரட்டும் மைனாக்கள்: மைனாக்களை விரட்டும் காகங்கள்: அவற்றை விரட்டும் கரிச்சான்கள்: அந்தக் கரிச்சான்களோடு மல்லுக்குப் போக மனமில்லாமல் விலகி நிற்கும் பருந்துகள்.

இந்த வீச்சமிக்க பகுதியைத் தாண்டுவதற்காக, வேகப்பட்ட அந்த வேன், டிரைவரின் ஆணையில்லாமலே கரா முரா சத்தத்தோடு நிற்கிறது. பராக்கு பார்த்த டிரைவர், “என்ன இழவு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து எம்பிப் பார்க்கிறார்... வேனுக்கு முன்னால் பாதையடைத்த பாறாங்கற்கள், அத்தனையும் மூன்றுபேரால்கூட தூக்கவோ, இரண்டு பேரால் கூட நகர்த்தவோ முடியாத பாறாங்கற்கள்... இடையிடையே செங்குத்தாய் நட்டு வைக்கப்பட்ட கற்றாழை முட்கள்.. கருவேல முட் குவியல்கள்.

அந்த வேனின் பயணிகள் எழுந்து நின்று எட்டிப் பார்த்தபோது, திபுதிபுவென்று ஆயுதம் தாங்கிய ஆட்கள் ஓடி வருகிறார்கள். இதைப் பார்த்த உடனே டிரைவர் உட்பட நான்கைந்துபேர், முன்பக்கமும், பின்பக்கமுமாக குதித்து புதர்களுக்குள் ஓடுகிறார்கள். டிரைவர் சப்பாத்திக் கள்ளிகளையே செருப்புகளாக்கி, வேதனையற்றுப் போய் ஓடுகிறார்...

இதற்குள் ஆயுதம் தாங்கிகளின் தலைவன்போல் ஒரு கையில் வேல் கம்பையும், இன்னொரு கையில் அரிவாளையும் வைத்திருந்த ஒரு சண்டியன், ஒரு சிலர் காதுகளில் ஊதுகிறான். உடனே அவர்கள் அந்தச் சாலையின் முன்பக்கத் திருப்பத்திற்கும், பின்பக்கத் திருப்பத்திற்கும் ஓடுகிறார்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/103&oldid=1371782" இலிருந்து மீள்விக்கப்பட்டது