சு. சமுத்திரம்
125
“நகையா வாங்கினால் என்ன...”
“பாக்கிறதுக்கு அழகா இருக்கும்.. ஆனா ஒரே போலி... நம்ம தட்டாசாரியும் கொஞ்சம் சுரண்டத்தான் செய்வான்... ஆனாலும் அவ்வளவு மோசமிருக்காது. ஒனக்கு தாலி செய்ததே அந்த மனுஷந்தான்.”
ராசகுமாரி, தந்தைக்கு எதிரே வழி மறிப்பதுபோல் நின்றுகொண்டு அவரையே மலங்க மலங்கப் பார்த்தாள், “அப்பா... அப்பா... தங்கத்துலயே தரம் பாக்குற அப்பா.. எனக்கு வாச்சவன் தரம் எப்படிப்பா...”
“ஏமுனா அபசகுனம் மாதிரி நிக்கே?... ஒதுங்கி நில்லேமுளா தடிமாடு...”
கருப்பசாமி பேசிய பேச்சைவிட அவர் பார்த்த பார்வையில் பயந்துவிட்ட ராசகுமாரி சிறிது ஒதுங்கிக் கொண்டாள். பின்புறமாய், நகர்ந்து விலகிக் கொண்டாள்.
ராசகுமாரிக்கு, வீறாப்பும், வீம்பும் ஏற்பட்டன. அதே சமயத்தில் அந்த அநியாயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது. அங்கே எவ்வளவு நேரம் நின்றாலும் அவர்கள் பேசப் போவதும் இல்லை.
ராசகுமாரி வீட்டைவிட்டு வெளியே பாய்ந்தாள். ‘பார்த்துப் போகப்படாதா’ என்று பொய் அதட்டலாய்க் கேட்ட மாரியம்மாப் பாட்டியை ஏறிட்டுப் பார்த்தபோதுதான், தனது வலுவான மோவாய் பாட்டியின் இற்றுப்போன தலையில் மோதியது தெரிந்தது. ஆனாலும், அந்த சுரணைகூட இல்லாமல் அவளைக் கடந்து நடந்தாள். மேயப் போகிற ஆடுமாடுகள் குவியல் குவியலாய், நிற்கும் ஊர் மந்தையைத் தாண்டி,