சு. சமுத்திரம்
139
கன்னையாவுக்குக் கொஞ்சம் பயம் பிடித்துக் கொண்டது. வெளியே வந்தான். அக்கம் பக்கத்துக் குடிசைகளைப் பார்த்தான். அப்போதுதான், ஆண்களும் பெண்களுமாக வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்டுப் பிரயோசனமில்லை.
கன்னய்யா, மீண்டும் குடிசைக்கு வந்தான். கை கால் கழுவிய மண்பாணையின் நிழலையே வெறித்துப் பார்த்தான்.
அவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. யாராவது நரபலிச் சாமியார் வந்திருப்பானோ...
தொலைதூரத்தில் தெரிந்த சுடுகாட்டில், சில பையன்களின் தலைகள் தெரிந்தன. கன்னையா ஓட்டமும் நடையுமாக அங்கே பாய்ந்தபோது, அங்கே நின்ற பையன்கள் அவனைப் பார்த்து ஓடி வந்தார்கள்.
"ராமனைப் பார்த்தீங்களாடா?"
"அதச் சொல்லத்தான் ஒடி வாறோம்..."
"சொல்லுங்கடா.. சீக்கிரமாச் சொல்லுங்கடா.."
"ராமன அவனோட அம்மா வந்து தூக்கிக்கிணு போனாங்க."
"யாரு?"
"அதான் ஒங்களோட பழைய சம்சாரம்..."
- எப்போடா வந்தாள்?"
"மத்யானமா ராமன் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தப்போ அவனோட அம்மா வந்தது... ராமனத் தூக்கிக்கினு போச்சுது..."
"அவன் சும்மா இருந்தானா?"