பக்கம்:ஈச்சம்பாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஈச்சம்பாய்


எல்லாக் கூடுகளும் கிட்டத்தட்ட முழுமை பெற்றன. ஆகாய சுரைக்காய்கள் அற்புதமாய்த் தொங்கின. கம்ப்யூட்டர் கால மனிதனின் வேகத்தையும் விறுவிறுப்பையும் மிஞ்சும் அற்புதத்தின் அதிசயமாய் அவை மின்னின.

இன்னோர் அதிசயம்...

கூடு கட்டிய ஆண் குருவிகள் தத்தம் கூடுகளில் முன் வாசலில் கால்களைப் பற்றிக் கொண்டு தலைகீழாகத் தொங்கின. பிறகு அப்படியே 'அந்தர்' அடித்துக் கூட்டுக்குள் போயின. பிறகு, வெளிப்பட்டு தலைகீழாகத் தொங்கி, பக்கவாட்டில் நிமிர்ந்து, எதிர் திசையில் உட்கார்ந்திருந்த பெண் குருவிகளைப் பார்த்து விசிலடித்தின. பெண்கள் பேசாது இருந்தபோது, ஆண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. விசில் சத்தம் வலுத்தது. மஞ்சள் பிரகாசிதான் எல்லா ஆண் குருவிகளையும்விட அதிகமாகக் கர்ணம் போட்டது. வேகமாக விசிலடித்தது.

மஞ்சள் பிரகாசி கண் வைத்த குருவியாள் தத்தித் தத்தி நடந்து, பிறகு மேலே பறந்து, அங்குமிங்குமாக வட்டமடித்து, ஒப்புக்கு ஒரு சில கிளைகளில் உட்கார்ந்துவிட்டு, பிறகு மஞ்சள் பிரகாசியின் கூட்டருகே வந்து உள்ளே எட்டிப் பார்த்தது. உடனே கர்ணம் போட்டுக் கொண்டிருந்த எல்லாக் குருவிகளும் அங்கே கூடி விட்டன. குருவியாளைச் சுற்றி மொய்த்துக் கொண்டு 'என் கூடு இதைவிட நல்ல கூடு' என்பது போல் இறக்கைகளை அகலமாய் விரித்தபடி, ‘ச்சூ ச்சூ ச்’ என்று குரலெழுப்பிக் காதல் கீதம் இசைத்தன. சில கூடுகளைக் கடைக்கண் விரித்துப் பார்த்த குருவியாள் சிறிது 'பிகு' செய்துவிட்டு மஞ்சள் பிரகாசியின் கூட்டுக்குள் சென்றது. எல்லா ஆண் குருவிகளும் சோக கீதம் இசைக்க, மஞ்சள் பிரகாசியும் வெற்றி வாசலுக்குள் நுழைவதுபோல், தன் கூட்டுக்குள் நுழைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/24&oldid=1495615" இலிருந்து மீள்விக்கப்பட்டது