பக்கம்:ஈச்சம்பாய்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

39


அசல் கார்த்திக் மாதிரி மிரட்டி - பிறகு ரஜினிகாந்த் மாதிரி அந்த ஆசாமியை விரட்டிய பாண்டியா, இப்போது குமுதாவின் மனதில் காலூன்றி விட்டான். இவளும் ஒரு கதாநாயகியாய் ஆகிவிட்டாள். அந்தச் சமயம் பார்த்து அவளை அறியாமலேயே ஒரு படுக்கையறை டூயட் பாட்டு காரணம் இல்லாமலே வாயில் முணுமுணுப்பாய் வெளிப்பட்டது... ஆனாலும் இளங்கோ அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்தான். இவள், விகஜயசாந்தி மாதிரி, அவனுக்கு ஒரு உதை கொடுத்து உருட்டி விட்டாள்.... தெலுங்குப் படங்களில் கொடிகட்டிப் பறக்கும் அந்த நடிகையை இவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

பாண்டியா, வண்டியை நிதானமாக ஓட்டியபடியே பின்பக்கமாய்த் திரும்பி ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

‘தப்பா நினைக்கப்படாது குமு! அந்தக் கார்க்காரப் பயல் பேசினது மாதிரிதான் இந்த ரோடுகாரப் பயலுக உன்னையும் என்னையும் ஒரு மாதிரிப் பார்க்காங்க. நீ விலகி இருக்கிறதனாலயும் பயந்து போய் அக்கம் பக்கம் பார்க்கிறதினாலயும் உன்ன நான் ஏதோ தள்ளிக்கிட்டுப் போறது மாதிரி நினைக்கிறாங்க. அதனால நெருக்கமா இருக்கிறது போல் நடித்தால் நல்லது.'

குமுதா ஓ.கே. சொல்லவில்லை, அதேசமயம் ஆக்ஷன் பெண்ணானாள். பின்னிருக்கையில் இருந்து முன்பக்கமாய் நகர்ந்து நகர்ந்து அவன் இடுப்போடு சேர்த்து வலது கையைக் கோர்த்துக் கொண்டாள். சும்மா ஒரு இதுக்குத்தான். இல்லாட்டி பார்க்கிறவங்க தப்பா நினைக்கப்படாதே- இந்த இளங்கோவும் இருக்கானே. அவன் மேல லேசா கைபட்டாபோதும் கற்பழிச்சிட்டது மாதிரி கதறுவான். பொது இடம், பொது இடமுன்னு பொலம்புவான். அவன எப்படித்தான் காதலிச்சேனோ ?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/41&oldid=1371910" இலிருந்து மீள்விக்கப்பட்டது