ஈரத்துணி
அன்று அலுவலகப் பவுர்ணமி நாள். ஆனாலும்—பட்டப் பகலிலேயே உதித்த இந்தப் பவுர்ணமி, அந்த அலுவலக வாசிகளில் சிலருக்கு, வளர்பிறைகளின் பரிபூரணம். பலருக்கோ, தேய்பிறைகளின் துவக்கம்… சுருக்கமாகச் சொல்லப் போனால், சம்பள நாள். துக்கமாய், துக்கிரியாய், விடை தெரியாப் புதிராய், விரக்தியாய், பற்றற்ற யோகியாய், மீனா போன்ற ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாய், பல்வேறு மனோ வடிவங்களைக் காட்டும் மாதக் கடைசி உழைப்பு நாள்.
அலுவலகப் பொருளாளன்—அதாவது கேஷியர் எனப்படும் காசாளர், தேசிய வங்கியில் இருந்து, கொண்டு வந்த பணக் கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து எண்ணிக் கொண்டிருந்தான். பியூன் மாரிமுத்துக்கு பொறுமை இல்லை. கந்து வட்டிக்காரப் பயல் வரும் முன்னால் ஓட வேண்டும்… நல்ல வேளை… நாளையும், மறு நாளும் சனி, ஞாயிறு! திங்கள், செவ்வாய் சிஎல்., மீதி நாள் பற்றி அப்புறம் யோசிக்கலாம். என்ன இந்த முரளி…
“முர்லி… ஒரு கட்டுல... முதல் நோட்டு நம்பரையும்… கடைசி நோட்டு நம்பரையும் பார்த்தால் போதுமே… ஏன் நேரத்தை வேஸ்ட் செய்யுறே”
“இடையில நாலைந்து நோட்டுக்களை உருவியிருந்தா, ஒங்கப்பனா தருவார்?”
காசாளன், நோட்டுக்களை எண்ணுவதை விட்டு விட்டு, அவை மேல் இரண்டு கரங்களையும் கிடுக்கிப் பிடியாய்