காலுக்குச் செருப்பாய்…
“ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா… நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி, நா பெத்த மவன போலிசில வீசிட்டியே… ஒன்ன விட்டா அவனுக்கு ஆருப்பா”
மாருதியின் நவீன அவதாரமான அந்தக் காரை பளபளக்க வைத்து விட்டு கீழே எறியப்பட்ட கந்தல் துணி போல், கீழே கிடந்த பொன்னம்மா எழுந்தாள். சற்றே உடம்பை நகர்த்தியவள், சுந்தரத்தைப் பார்த்து விட்டாள். அந்த அழுக்குத் துணி காற்றால் தூக்கப்பட்டு, ஒரு கம்பு முனையில் விழுந்தால், எப்படித் தோன்றுமோ, அப்படிப்பட்ட தோற்றத்தோடு எழுந்தவள், கார்க் கதவைத் திறக்கப் போன கந்தரத்தை வழி மறிப்பவள் போல், நின்று கொண்டு இப்படிக் கேட்டு விட்டாள்.
கந்தரம் திடுக்கிட்டார். பிறகு அவளைத் திட்டப் போவது போல், முகத்தை வீராப்பாக்கினார். பழக்கப்பட்ட முகம் என்பதால் சிறிது நிதானித்தார். ஆனாலும், அதற்குள் “என் சிநேகிதனை எப்படித் திட்டலாம்” என்று கேட்பது போல், பங்களாவுக்குள் கிடந்த நாய் கேட்டுக்கு மேல் முன்னங்கால்களைப் பற்றிக் கொண்டு, பின்னங்காலில் ஒரு மனிதன் போல் நின்றபடி குரைத்தது. அந்தக் குரைப்பு, பங்களாம்மாவையும் வாசல் வரை கொண்டு வந்து விட்டது.
சுந்தரம் கார் முனையில் ஒரு கையை ஊன்றியபடியே, குரைத்த நாயை இன்னொரு கையால் ஆற்றுப்படுத்தி விட்டு அவளைக் கேட்டார்.