3.திரையைக் கிழி!
ஏறி நின்று பாரடா எங்கும்
எங்கும் பாரடா இப்புவி மக்களை;
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டீய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்குமக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
... ... ... ... ...
குள்ள மனிதர்க்கும் கூறடா (பாரதிதாசன்)
இன்றைய இலக்கிய உலகிலே தேக்கம் நிலவுகிறது என்பதை எல்லோரும் உணர்கிறார்கள். இலக்கிய வளர்ச்சி மேல் நாடுகளில் உள்ளது போல் தீவிர கதியில் முன்னேறவில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அதே வேளையிலே எழுத்தாளர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. பத்திரிகை படிக்கிறவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடத் தவிக்கிறார்கள், எழுதிய எல்லாம் - குப்பை கூளமெல்லாம்-அச்சிலே வரவேணும் என அவாவுகின்றனர். பத்திரிகாசிரியர்களைப் பழி வாங்கவும், வாசகர்களை வதை புரியவும், தங்கள் எழுத்தை அச்சிலே காணும் ஆசையாலும் 'மாதம் ஒரு புத்தக'ங்களும் பத்திரிகைகளும் உற்பத்தி பண்ணிக் குவிக்கிறார்கள்.