பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

எழுந்தனர் அங் கோர்மேடை தனிலேறி
   நின்றாரவ் ஈரோட் டண்ணல்!
எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
   மனிதஉரு வெடுத்துக் கொண்டே!

விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
   செயச்செய்த வீரப்பேச்சை;
எழுந்துதமிழ்ச் சொற்களினால் இளைஞர்களைத்
   தட்டிவிட்ட இலக்கியத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
   செயஅன்றே கொளுத்திவிட்ட
செழுந்தமிழின் வீறார்ப்பைச் செவிமடுத்தோர்
   உணர்வடைந்தார்! சிங்க மானார்!

தாய்மொழியைக் காப்பாற்றத் துடித்தெழுந்து
   கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
   சிறைக்கூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
   தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார்! அரசியலார்
   கைவிட்டார்: பொருமிற் றுள்ளம்!

மறைமலை பார் தமிழ்க்களித்த திருநீலாம்
   பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்'டில்
   கூடிநின்றோர் நெஞ்சிற்பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
   உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
   வரலாறோ சிலம்புக் காதை !